புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வீடு புகுந்து மர்மநபர்கள் 36 சவரன் நகை மற்றும் ரூ.2 இலட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

துரையரசபுரம் அருகே உள்ள சிலம்பாவை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெரியசாமி – பொய்யாமுத்து தம்பதி. இவர்களுக்கு ராசிகா மற்றும் ராமநாதன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் ராமநாதன் வெளிநாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். தனது திருமணத்துக்காக நகை மற்றும் பணம் சேமித்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று பெரியசாமி விவசாயப் பணிக்காக காலையில் வெளியில் சென்றவர் மதியம் வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 36 சவரன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் கொள்ளைபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அறந்தாங்கி காவல்துறை கண்காணிப்பாளர் சார்லஸ் மற்றும் ஆவுடையார் கோவில் காவல் ஆய்வாளர் செந்தில் குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்

வெளிநாட்டில் வேலை பார்த்து தன் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகை பணம் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version