திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், அவற்றை பட்டியலிட்டு சொல்லலாம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை அடுத்த நெம்மேலியில் நீர்வளத்துறை சார்பில் ரூ.342 கோடி மதிப்பீட்டில் புதிதாக மாமல்லன் நீர்த்தேக்கம் அமைகிறது. சென்னையின் 6-வது நீர்த்தேக்கமான மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “காற்றும் நீரும் இந்த பூமியில் இருப்பதால் தான் உயிரினங்கள் உருவாகி வாழ்கிறோம். நீரின்றி அமையாது உலகு என உலகப் பொதுமறையில் எடுத்துக்கூறினார் வள்ளுவர். இயற்கையோடு இணைந்ததுதான் தமிழர் வாழ்வு. அதை ஒட்டியே திராவிட மாடல் அரசு நடைபெறுகிறது.
1967 – 2011 திமுக ஆட்சி கால கட்டங்களில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன. 43 நீர்த்தேக்கங்களை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. மேட்டூர் அணை முழுவதும் நிரம்பி குறித்த நேரத்தில் திறந்து வைத்திருக்கிறோம். ரூ.342.60 கோடி மதிப்பீட்டில் தற்போது புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட உள்ளது. புதிய நீர்த்தேக்கம் மூலம் நாளொன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் குடிநீரை வழங்க முடியும்.
இந்த நீர்த்தேக்கம் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு பயன்படும். 34 கி.மீ. நீள கரையுடன் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்பட உள்ளது. பெருமை உணர்வோடு சொல்கிறேன்… இந்த மாமல்லன் நீர்த்தேக்கம், மக்களுக்கு காலந்தோறும் வாழ்வளிக்க போகிறது. ஏற்கனவே சென்னையைச் சுற்றி செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஏரிகள் உள்ளன. நிதி மேலாண்மை போல் நீர் மேலாண்மையும் மிக மிக முக்கியம். சென்னைக்காக திமுக அரசு எத்தனையோ திட்டங்களை செய்து கொடுத்திருக்கிறது. சென்னையின் முகமே மாறக்கூடிய வகையில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறோம் என்று கூறினார்.
2021-25 ஆகிய ஐந்து ஆண்டுகளில் காவிரி டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகள் 459.11 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுள்ளன. 24,833.66 கி.மீ நீளத்திற்கு இவை சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடை மடை விவசாயிகள் பயனடைந்தனர்.
மாநிலம் முழுவதும் புதியதாக 121 தடுப்பணைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 63 அணைகட்டுகள் அமைக்கும் பணிகள்மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் மிக மிக முக்கியமானது – தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு கால்வாய் திட்டம் ஆகும். 07.02.2025 துவங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ஐந்தாண்டுகளில் 9.00 டிஎம்சி நீர் வறட்சி பகுதியான திசையன்விளை மற்றும் சாத்தான்குளம் வரை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த ஐந்து ஆண்டுகளில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் 47 ஆயிரத்து 920 ஏரிகள் மற்றும் 1,33,967 கிலோமீட்டர்கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 342.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இது அமைக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களில் கிழக்கு கடற்கரைச் சாலைக்கும் (ECR) பழைய மாமல்லபுரம் சாலைக்கும் (OMR) இடையில் ஒருஉள்ள கோவளம் உபவடிநிலத்தில் இந்த புதிய நீர்த்தேக்கம் அமைய உள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக நாள் ஒன்றுக்கு170 மில்லியன் லிட்டர் குடிநீரை மக்களுக்கு நம்மால் வழங்க முடியும்.
மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளான சோழிங்கநல்லூர், மேடவாக்கம், பள்ளிக்கரணை, சிறுசேரி, கேளம்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க இயலும். இத்திட்டத்தினால் சுற்று வட்டாரத்தில் உள்ள
திருவிடந்தை, கோகிலமேடு , மாமல்லபுரம்,திருப்போரூர் தண்டலம், பையனூர் ஆகிய பகுதிகளில் நன்னீரை தேக்கி கடல் நீர் உட்புகுதலை தடுத்து நிலத்தடி நீரின் மட்டம் மற்றும் அதன் தரம் மேம்படும்.
இப்பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாய் 15 கிலோமீட்டர் நீளம் 311 ஏக்கர் பரப்பளவில்சீரமைப்பதினால், உவர் நீர் மீன் வளத்தை நம்பி உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும். மேலும் அப்பகுதியில் வசிக்கும் மீனவர்களுக்கு மீன் பிடி உரிமம் வழங்கப்படும் என முதலமைச்சர் கூறினார்.
