திமுகவின் முக்கிய அணிகளில் ஒன்றான மாணவரணியில், அதன் வரலாற்றிலேயே முதல்முறையாகப் பெண் ஒருவர் செயலாளராக நியமிக்கப்பட்டு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை மாணவரணி செயலாளராகப் பணியாற்றி வந்த ராஜீவ் காந்தி அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, புதிய செயலாளராக  வீரமணி ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். திமுகவின் மாணவர் அணி வரலாற்றில் பெண் ஒருவர் இந்தப் பொறுப்பிற்கு வருவது இதுவே முதல்முறை என்பதால், இது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

மாணவரணி செயலாளராக இருந்த ராஜீவ் காந்தி, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட விரும்புவதாகவும், அதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தேர்தல் விருப்பத்தின் காரணமாகவே அவர் நிர்வாகப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தற்போது அவர் கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் தேர்தல் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திடீர் மாற்றங்கள் திமுகவின் 2026 தேர்தல் வியூகத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது. குறிப்பாக, கோவை போன்ற முக்கியப் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த ராஜீவ் காந்தியைப் பயன்படுத்தவும், அதே நேரத்தில் மாணவர் அணியில் பெண் பிரதிநிதித்துவத்தைக் கொண்டு வந்து புதுமையை புகுத்தவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version