தமிழக வெற்றிக் கழகத்தில் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில், அக்கட்சியின் உயர்மட்ட நிர்வாகக் குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளரான கே.ஏ. செங்கோட்டையனுக்குப் புதிய பொறுப்புகள் வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையைச் சரியாகக் கையாள்வது குறித்து கட்சித் தலைவர் விஜய் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பங்கேற்று எக்சிட் போல் (Exit Poll) முடிவுகள் மற்றும் கள நிலவரங்கள் குறித்து விவாதித்தனர்.

இந்தக் கூட்டத்தில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் தவெக வேட்பாளர்களும் முகவர்களும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவான அறிக்கை ஒன்றை செங்கோட்டையன் விஜயிடம் சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது. மூத்த அரசியல்வாதியான அவரது அனுபவத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், வாக்கு எண்ணிக்கை கண்காணிப்புப் பணிகளுக்கான இடைக்காலக் குழுவின் தலைவராக அவரை நியமிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். கட்சித் தொடங்கிய குறுகிய காலத்திலேயே தேர்தலைச் சந்தித்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போது எவ்விதத் தொய்வும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் விஜய் உறுதியாக இருப்பதை இந்த நடவடிக்கை காட்டுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version