ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் மனநலம் பாதித்தவரின் செயலால் பயணிகள் அலறியடித்து ஓடியுள்ளனர்.

திருவாடானை பேருந்து நிலையத்திலிருந்து ஆனந்தூர் செல்ல வேண்டிய நகரப் பேருந்து ஒன்று பயணிகளுடன் தயார் நிலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது பணியில் இருந்த ஓட்டுநரும் நடத்துநரும், அடுத்த ஷிப்ட் ஊழியர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பதற்காகப் பேருந்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கிச் சென்றனர்.

அந்தச் சமயம் பேருந்துக்குள் ஏறிய மர்ம நபர் ஒருவர், திடீரென ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை இயக்கத் தொடங்கியுள்ளார்.

பேருந்து நகரத் தொடங்கியதும், “யாரோ இயக்கத் தெரியாத நபர் பேருந்தை ஓட்டுகிறார்” என்பதை உணர்ந்த பயணிகள், அச்சத்தில் அலறியுள்ளனர்.

பேருந்து சுமார் 10 அடி தூரம் செல்வதற்குள்ளேயே, உள்ளே இருந்த ஐந்து பயணிகள் தங்களது உயிரைக் காத்துக்கொள்ள பேருந்திலிருந்து கீழே குதித்து ஓட்டம் பிடித்தனர்.

சத்தம் கேட்டு ஓடிவந்த ஓட்டுநர் மற்றும் அங்கிருந்தவர்கள் உடனடியாக பேருந்துக்குள் ஏறி, அதனை நிறுத்தி,  அந்த நபரைச் சூழ்ந்து பிடித்து, திருவாடானை காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

திருவாடானை அருகே உள்ள நத்தக்கோட்டை பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் என்னும் அந்த நபர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அவரது உறவினர்களை வரவழைத்து, அவரைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ள அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

“பேருந்து நிலையத்திற்கு உள்ளேயே இந்தச் சம்பவம் நடந்ததால் பயணிகள் காயமின்றித் தப்பினர். ஒருவேளை பேருந்து நிலையத்தை விட்டு வெளியே சாலைக்குச் சென்றிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்” என அங்கிருந்த பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version