நடப்பு ஐபிஎல் 2026 தொடரில் காயங்களால் தவித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, தற்போது ஒரு முக்கிய அதிரடி முடிவை எடுத்துள்ளது. அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக ஒரு புதிய இளம் வீரரைத் தேர்வு செய்ய சிஎஸ்கே நிர்வாகம் ‘மிட்-சீசன்’ சோதனைகளை (Trials) தொடங்கியுள்ளது. இதற்காக மகாராஷ்டிராவைச் சேர்ந்த 21 வயதான இளம் ஆல்-ரவுண்டர் ஆயுஷ் வர்தக் (Ayush Vartak) சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 27 அன்று சென்னை வந்தடைந்த அவர், இன்று (ஏப்ரல் 28) தனது திறமையை நிரூபிக்க சோதனைகளில் பங்கேற்கிறார்.

ஆயுஷ் வர்தக் இதுவரை சீனியர் லெவல் கிரிக்கெட்டில் விளையாடாவிட்டாலும், ஜூனியர் கிரிக்கெட்டில் ஒரு அதிரடி வீரராகப் பெயரெடுத்தவர். மும்பை யு-23 அணியின் கேப்டனாக இருந்த இவர், கடந்த சி.கே. நாயுடு டிராபியில் 9 போட்டிகளில் 770 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும், 2025 ஸ்டேட் ஏ டிராபியில் 6 இன்னிங்ஸ்களில் 363 ரன்கள் விளாசியதோடு, அதில் 26 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பேட்டிங்கில் மட்டுமல்லாமல், பந்துவீச்சிலும் 2023 கூச் பெஹார் டிராபியில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியவர். ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளிடம் பயிற்சி பெற்ற இவரை, தற்போது சிஎஸ்கே ஒப்பந்தம் செய்ய அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

தற்போது சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் 8 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. பிளே-ஆஃப் வாய்ப்பைத் தக்கவைக்க மீதமுள்ள 6 போட்டிகளில் குறைந்தது 5 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே இருக்கிறது. நாதன் எல்லிஸ், கலீல் அகமது போன்ற முக்கிய வீரர்கள் காயத்தால் விலகியது அணிக்கு பின்னடைவாகக் கருதப்படும் நிலையில், ஆயுஷ் வர்தக் போன்ற ஒரு இளம் வீரரின் வருகை அணிக்கு புதிய பலத்தைத் தருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version