வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, பத்தடி நீள மலைப்பாம்பு ஒன்று டூவீலர் மீது ஏறி தஞ்சமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேத்துவண்டை கிராமத்தின் பைபாஸ் சாலை சந்திப்பு அருகே, விளைநிலங்களை விட்டு வெளியேறிய பிரம்மாண்ட மலைப்பாம்பு ஒன்று சாலையைக் கடக்க முயன்றது. இதைப் பார்த்த வாகன ஓட்டிகள், தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.
அப்போது, கூட்டத்தைக் கண்டு மிரண்ட அந்தப் பாம்பு, அருகில் நின்றிருந்த டூவீலரின் சீட் மீது சரசரவென ஏறி படுத்துக்கொண்டது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினரும், வனவர் குமரேசன் தலைமையிலான வனத்துறையினரும், வாகனத்தில் இருந்த மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்து மீட்டனர். பின்னர் பிடிபட்ட அந்தப் பாம்பு பத்திரமாக அடர்ந்த காப்புக் காட்டுப் பகுதியில் கொண்டு போய் விடப்பட்டது. இந்த திக் திக் சம்பவத்தால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு நிலவியது.
