வாசுதேவநல்லூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (அதிமுக) மனோகர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை சந்தித்து கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் நிற்பதற்கு மனோகரனுக்கு ஜெயலலிதா சீட் கொடுத்தார். அப்போது 18,758 வாக்குகள் வித்தியாசத்தில் புதிய தமிழகம் கட்சியின் எஸ்.அன்பழகனை தோற்கடித்து மனோகரன் பெற்ற வாக்குகள் 73,904. இதன் தொடர்ச்சியாக 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவில் மீண்டும் சீட் கிடைத்தது. ஆனால் மதிமுக வேட்பாளர் டி.சதன் திருமலைக்குமாரிடம் அதிமுகவின் மனோகரன் தோல்வியை தழுவினார்.
இந்நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் சீட் எதிர்பார்த்து மனோகரன் காத்திருந்தார். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இம்முறை பாஜகவிற்கு வாசுதேவநல்லூர் தொகுதி ஒதுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின. இதனால் அதிருப்தியில் இருந்த மனோகரன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை சந்தித்து கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அதிமுகவில் சீட் கிடைக்காது என்பதை அறிந்த சிலர், மாற்றுக்கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். ஆனால், இது தவெகவில் உட்கட்சி பூசலை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. ஏனென்றால், தவெகவில் இணைந்தால் சீட் கொடுப்பார்கள் என்று புதிதாக சேர்ந்தவர்கள் எண்ணுகின்றனர். அப்படி கொடுத்தால், ஏற்கனவே கட்சியில் இருக்கும் நிர்வாகிகளுக்கு சீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும், இதனை தீர்ப்பதே அக்கட்சியின் தலைமைக்கும் பெரும் நெருக்கடியாக மாறலாம் என்றும் கூறப்படுகிறது.
