108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் அம்மா மண்டபம் படித்துறைக்குச் சென்று காவேரி ஆற்றில் புனித நீராடுவதையும், கோயிலின் பூஜைகளுக்காக அங்கிருந்து புனித நீர் கொண்டு செல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆடிப்பெருக்கு மற்றும் அமாவாசை போன்ற விசேச நாட்களில் இந்த படித்துறையில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதும்.

இத்தகைய சிறப்புமிக்க காவேரி ஆற்றில், திடீரென டன் கணக்கில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பதைக் கண்டு அதிர்ந்துபோன பொதுமக்கள், உடனடியாக இதுகுறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, திருச்சி மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கரையில் குவிந்திருந்த இறந்த மீன்களை அகற்றும் தீவிரப் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, ஆற்றில் மீன்கள் செத்துக்கிடக்கும் இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version