தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் நட்சத்திரப் பேச்சாளராக அறிவிக்கப்பட்டுள்ள அண்ணாமலை, இன்று முதல் தனது அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார். கட்சியின் வெற்றிக்காகத் தமிழகம் முழுவதும் சுழன்று பணியாற்றத் திட்டமிட்டுள்ள அவர், இன்று கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாகத் தனது முதல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார்.
நாளை திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதிக்குச் செல்லும் அண்ணாமலை, அங்கு போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து அவிநாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளார். தான் தேர்தலில் போட்டியிடாத போதிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வதே தனது முக்கிய இலக்கு என அவர் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பாஜக வெளியிட்டுள்ள நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் முக்கிய இடம்பிடித்துள்ள அண்ணாமலைக்கு, தமிழகம் மட்டுமின்றி கேரளா மற்றும் புதுச்சேரியிலும் பிரசாரம் செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 7-ம் தேதி முதல் முழுமையாகத் தமிழகத்தில் முகாமிட்டு, 234 தொகுதிகளிலும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் செய்ய உள்ளார். அண்ணாமலையின் இந்தச் சுற்றுப்பயணம் பாஜக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
