நெல்லையில் இருவேறு பிரிவை சேர்ந்த காதல் திருமணத்திற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், மணப்பெண் மர்மமுறையில் உயிரிழந்திருப்பது ஆணவக் கொலையா என்ற அச்சம் நிலவுகிறது.

நெல்லை பேட்டை செக்கடியைச் சேர்ந்த பச்சிராஜன், அரசு பஸ் டிரைவர்; அவரது மனைவி ரேவதி, தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களின் இளையமகள் சிவமதி (18) பாளை கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். சிவமதி, பேட்டை கடசர் தெருவைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணனுடன் காதலித்து வந்தார். ஆனந்த கிருஷ்ணன் ஏர்டெல் நிறுவனத்தில் டீம் லீடராக பணியாற்றுகிறார்.

 

இருவரும் வெவ்வேறு பிரிவினரினால், சிவமதியின் பெற்றோர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உறவினர் மகனுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதையொட்டி, ஆனந்த கிருஷ்ணனும் சிவமதியும் வரும் 6-ஆம் தேதி திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

கடந்த சில தினங்களில் சிவமதியின் உடல்நிலை சரியில்லை எனக் கூறி, மாலை 6 மணியளவில் அவரை டவுன் கண்டியபேரி அரசு மருத்துவமனையில் கழுத்தில் காயத்துடன் பெற்றோர் சேர்த்தனர். மருத்துவமனை பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. பேட்டை போலீசார் மர்மச்சாவாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த பட்டியல் சாதி மென்பொருள் பொறியாளரான கவின் செல்வகணேஷ், ஜூலை 27, 2025 அன்று திருநெல்வேலியில் படுகொலை செய்யப்பட்டாா். காவல் உதவி ஆய்வாளா்களான (தற்போது பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளனா்) சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோரின் மகன் சூா்ஜித்தால் வெட்டிக் கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது

சூா்ஜித்தின் சகோதரியுடன் கவினுக்கு இருந்ததாகக் கூறப்படும் சாதி மறுப்பு உறவே படுகொலைக்குக் காரணம் என கூறப்பட்டது. இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், குற்றவாளி சூா்ஜித் கைது செய்யப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version