கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள நல்லிசெட்டிபாளையம் கிராமத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார், பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் மற்றும் படிப்பகத்தை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் திரைப்பட நடிகர் சத்யராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக எம்.பி ஆ.ராசா பேசியதாவது:

தமிழகத்திலோ அல்லது இந்தியாவிலோ வேறு எங்கும் காண முடியாத ஒரு தனித்துவமான பெருமையை இந்த நல்லிசெட்டிபாளையம் கிராமம் பெற்றுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி முதலமைச்சராக இருந்தபோது பெரியாருக்குச் சிலை வைத்தார்.

தமிழகத்தில் அம்பேத்கருக்குப் பல இடங்களில் சிலைகள் உள்ளன. ஆனால், பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகிய இருவருக்கும் ஒரே இடத்தில் சிலை அமைந்திருப்பது இந்த கிராமத்தில் தான். சட்ட சிக்கல்களையும் கடந்து இதனைச் சாதித்துக் காட்டியுள்ள இப்பகுதி இளைஞர்களுக்கு எனது வாழ்த்துகள்.

பெரியார் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினார் என்று பேசுவதைப் போல, பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்காக அம்பேத்கர் ஆற்றிய பணிகளையும் நாம் அதிகம் பேச வேண்டும். இன்று கல்வி கற்று, அரசு உயர் பதவிகளில் இருக்கும் அனைத்துப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும் அம்பேத்கருக்கு நன்றிக்கடன்பட்டவர்கள். கல்வி மூலமே உண்மையான அதிகாரம் கிடைக்கும் என்று கூறி, அரசியலமைப்புச் சட்டத்தின் 340வது பிரிவின் கீழ் பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம் அமைய அடித்தளமிட்டவர் அம்பேத்கர். அதன் விளைவாக வந்த மண்டல் கமிஷன் பரிந்துரைகளால் தான் இன்று பலரும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாகப் பொறுப்பேற்க முடிந்துள்ளது.

அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனிதகுலத்திற்காகவும், பெண்களின் உரிமைக்காகவும் போராடினார். சொத்துரிமை, விவாகரத்து உரிமை உள்ளிட்டவைகளை உள்ளடக்கிய ‘இந்து சட்டத் தொகுப்பு மசோதா’ (Hindu Code Bill) நாடாளுமன்றத்தில் முடக்கப்பட்டபோது, தனது அமைச்சர் பதவியையே துறந்தவர் அம்பேத்கர். அன்று அவர் விதைத்த உன்னதமான சிந்தனைகளைத் தான் பின்னாளில் கலைஞர் கருணாநிதி சட்டமாக நிறைவேற்றினார். பாசிச மற்றும் சாதிய சக்திகள் தலைதூக்கும் இந்நேரத்தில், நாட்டின் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயகக் கட்டமைப்பைக் காக்க அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டம் நமக்குக் கேடயமாக விளங்குகிறது என்று ஆ.ராசா பேசினார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் சத்யராஜ் பேசியதாவது:

பெரியாரைப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் தலைவராகவும், அம்பேத்கரை ஒடுக்கப்பட்ட சமூகத்தின் தலைவராகவும் சித்தரித்து, இருவருக்கும் இடையே மோதலை உருவாக்கச் சிலர் முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்கள் இருவருமே ஒட்டுமொத்த மனித சமூகத்தின் இரு கண்கள். பெரியார் மகாராஷ்டிராவில் பிறந்திருந்தால் அம்பேத்கராகவும், அம்பேத்கர் ஈரோட்டில் பிறந்திருந்தால் பெரியாராகவும் இருந்திருப்பார்கள். அவ்வளவு ஏன், இவர்கள் ஜெர்மனியில் பிறந்திருந்தால் கார்ல் மார்க்ஸாகக் கூட இருந்திருப்பார்கள்.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தனது திரைப்படங்கள் மூலம் பெரியார், அண்ணா மற்றும் கம்யூனிசக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தார். 1967-ல் ஆட்சிக்கு வந்த பிறகு அடுத்த தலைமுறைக்குக் கொள்கைகளைக் கொண்டு சேர்ப்பதில் தொய்வு ஏற்பட்டது உண்மைதான். ஆனால், இன்று ‘ஜென் ஜி’ (Gen Z) இளைஞர்கள் டிஜிட்டல் தளங்கள் மூலம் கொள்கைகளை மிகச் சிறப்பாகக் கொண்டு சேர்த்து வருகிறார்கள்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தம்பிகளும், தங்கைமார்களும் தங்களது தலைவர் காட்டிய வழியில் பெரியார் மற்றும் அம்பேத்கரின் சிந்தனைகளைப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். எதிர்காலத்தில் எங்கு பெரியார், அம்பேத்கர் சிலைகள் அமைக்கப்பட்டாலும் அதற்கு நான் நிதி உதவி வழங்கத் தயாராக இருக்கிறேன். திரைப்படங்கள் மூலம் கிடைக்கும் பணத்தை விட, இதுபோன்ற கொள்கை நிகழ்வுகளில் பங்கேற்பது தான் எனக்குப் பேரமைதியைத் தருகிறது. அதேபோல், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்திய முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கும் தமிழகத்தில் சிலைகள் அமைக்கப்பட வேண்டும் என்று சத்யராஜ் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தோழர்களும், பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version