சென்னை கோயம்பேட்டில் இளம்பெண் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள இருவர் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

விழுப்புரத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்துவந்த இலங்கை தமிழ் பெண்ணான யான்சியும், சென்னையில் உள்ள அவரது தோழிகளும் கடந்த மே 30ஆம் தேதி, கோயம்பேட்டில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் உள்ள மதுபான பாருக்கு சென்றுள்ளனர். அங்கு நடனமாடும் போது, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர்களை, பவுன்சர்கள் வெளியேற்றினர்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், இரு சக்கர வாகனத்தில் தோழியுடன் சென்ற யான்சி மீது காரை மோதியுள்ளனர். தூக்கி வீசப்பட்ட யான்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஃபவுசியாவும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோயம்பேடு போலீசார் தியாகராஜன், பாரதி உள்ளிட்ட 7 பேரை ஜூன் 4ஆம் தேதி கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள தியாகராஜன், பாரதி ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், சம்பவம் நடந்தபோது தாங்கள் சம்பவ இடத்தில் இல்லை என்றும், சம்பவத்தில் தொடர்புபடுத்த நேரடியாக எந்த ஆதாரங்களும் இல்லை என்றும், தங்களுக்கு எதிராக பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியுள்ளனர்.

இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி எஸ்.கார்த்திகேயன், ஜூன் 17ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version