மக்களவை மற்றும் பேரவைகளில் 33 சதவிகித மகளிர் இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டு முதல் அமலாக்கவும், இதற்கு ஏற்ற வகையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 534-இல் இருந்து 850 வரை அதிகரிக்க வழிவகை செய்யும் அரசமைப்பு சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்களை அறிமுகம் செய்து, நிறைவேற்றும் வகையில் சிறப்பு அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மகளிர் இடஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா, தொகுதி மறுவரை திருத்த மசோதா உள்ளிட்டவைகளுக்கான வாக்கெடுப்பு நேற்று (ஏப்ரல் 17) மாலை நடைபெற்றது. இதில் 489 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு கூட்டத்தொடரில் 534 உறுப்பினர்களில் 528 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இவர்களில் மசோதாவுக்கு ஆதரவாக 298 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், 230 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்தனர்..

இதன் காரணமாக மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்த தொகுதி மறுவரை மசோதா, மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற மூன்றில் ஒருபங்கு வாக்குகள் கிடைக்காததால், இந்த மசோதா தோல்வியடைந்தது. மசோதா தோல்வியடைந்ததையடுத்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மகிழ்ச்சியை இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினார். தமிழ்நாடு சட்டசபை தேர்தலை ஒட்டி திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் பரப்புரைக்கு செல்லும் வழியில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தேர்தலுக்கு முன்பாகவே தோல்வியைத் தழுவிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, தொகுதி மறுவரையறை என்ற “கருப்புச் சட்டத்திற்கு” எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, தான் ஆண்டிப்பட்டியில் கருப்புச் சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டதை நினைவு கூர்ந்துள்ளார். இந்தத் திட்டத்திற்கு எதிராகத் திரண்ட மக்களின் போராட்டத்தால் மசோதா தோல்வியடைந்துள்ளதை ஒரு வரலாற்று வெற்றியாக அவர் முன்னிறுத்தியுள்ளார்.

மசோதா தோல்வி அடைந்த செய்தி கிடைத்ததும், போராட்டக் கோலமான கருப்பு உடையிலிருந்து மீண்டும் தனது வழக்கமான வெள்ளை உடைக்கு மாறி, மக்கள் முன்னிலையில் உற்சாகமாகத் தோன்றியதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட மக்கள் வழங்கிய இந்த எழுச்சியானது, வரும் மே 4-ஆம் தேதி திமுக ஏழாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பதற்கு ஒரு முன்னோட்டமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் பட்டாசுகள் வெடித்தும், தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தமிழகம் முழுவதும் திமுகவினர் இந்தச் செய்தியைக் கொண்டாடி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version