தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் இன்று தொடங்கியது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய், இன்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். “சி.ஜோசப் விஜய் என்னும் நான்…” என அவர் உறுதிமொழி எடுக்க, அவருக்கு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் முறைப்படி பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். முன்னதாக, விழா மேடைக்கு வருகை தந்த ஆளுநரை, விஜய் அவர்கள் பொன்னாடை போர்த்தி, மலர்க்கொத்து வழங்கி மிகுந்த மரியாதையுடன் வரவேற்றார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் காண ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு வந்து முழக்கமிட்டது மைதானத்தையே அதிரச் செய்தது.
தேசபக்தி மற்றும் கலாச்சார உணர்வுடன் தொடங்கிய இந்த விழாவில், முதலில் ‘வந்தே மாதரம்’ பாடல் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கம்பீரமான இசைக்கு நடுவே தேசிய கீதம் மற்றும் மாநிலத்தின் பெருமைமிகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கி, மக்கள் செல்வாக்கோடு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள விஜய்யின் இந்த பதவியேற்பு விழா, தமிழக அரசியலில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. விழாவின் இறுதியில் புதிய அமைச்சரவை உறுப்பினர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர், அதாவது, ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன்,வெங்கட ரமணன், நிர்மல் குமார், ராஜ் மோகன், பிரபு, கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கும் ஆளுநர் பதவிப்பிரணமானம் செய்து வைத்தார். இது தமிழகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான புதிய பயணத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது.
