தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய் இன்று தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். விழா மேடைக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.வி. அர்லேகரை, பொன்னாடை போர்த்தியும் பூங்கொத்து கொடுத்தும் விஜய் இன்முகத்தோடு வரவேற்றார். தேசபக்தி முழக்கமிடும் வகையில் ‘வந்தே மாதரம்’ பாடலுடன் விழா இனிதே தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கம்பீரமான இசையுடன் தேசிய கீதம் மற்றும் மாநிலத்தின் அடையாளமான தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க, ஈடுஇணையற்ற மக்கள் ஆதரவுக்கு மத்தியில் விஜய் முறைப்படி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பதவியேற்ற சில நிமிடங்களிலேயே, முன்னெப்போதும் இல்லாத ஒரு வரலாற்று நிகழ்வாக, விழா மேடையிலேயே தனது முதல் முக்கியக் கோப்புகளில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார். மக்கள் நலனை முன்னிறுத்தி அவர் இட்ட முதல் கையெழுத்து, தமிழக மக்களுக்கு இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டமாகும். சாமானிய மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் இந்த அறிவிப்பு, மேடையிலேயே அறிவிக்கப்பட்டபோது தொண்டர்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. இதன் மூலம் தனது ஆட்சிக் காலத்தின் முதல் வாக்குறுதியை அதிகாரப்பூர்வமாக அவர் நிறைவேற்றியுள்ளார்.

அடுத்ததாக, சமூகப் பாதுகாப்பு மற்றும் இளைய தலைமுறையினரின் நலன் கருதி இரண்டு முக்கிய அதிரடிப் படைகளை உருவாக்க அவர் உத்தரவிட்டார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை உருவாக்குவதற்கான கோப்பில் அவர் கையெழுத்திட்டார். அதனைத் தொடர்ந்து, தமிழகத்தை அச்சுறுத்தி வரும் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க ‘போதைப்பொருள் தடுப்புப் படை’ அமைப்பதற்கான கோப்பிலும் கையெழுத்திட்டுத் தனது பணிகளைத் தொடங்கினார். பதவியேற்ற முதல் சில நிமிடங்களிலேயே மக்கள் பாதுகாப்பு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான 3 முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்திய விஜய்யின் இந்தச் செயல், தமிழக அரசியலில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version