சட்டமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க. தேர்தலை சந்திக்கின்றன. இந்த கூட்டணியில் பா.ம.க., அ.ம.மு.க. மற்றும் சிறிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கூட்டணி உறுதியாகி விட்டதால் அடுத்த கட் டத்தை நோக்கி இந்த கூட்டணி நகர்ந்து வருகிறது. ஏற்கனவே கடந்த மாதம் 22-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.
மீண்டும் தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி வருகிறார். வருகிற 28-ந்தேதி (சனிக்கிழமை) அவர் மதுரையில் பிரசாரம் செய்கிறார். ஏற்கனவே மதுராந்தகத்தில் நடந்த கூட்டத்தை மதுரையில் நடத்தவே திட்டமிட்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், கள நிலவரங்களை ஆராயும் வகையில் 2 நாள் பயணமாக மத்திய அமைச்சர் அமித் ஷாவும் நாளை திருச்சி வருகை தரவுள்ளார். அவருடன் மத்திய அமைச்சரும், பாஜக மேலிட பொருப்பாளருமான பியூஷ் கோயலும் வரவுள்ளதாக கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் மையக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் இவர், வரும் தேர்தலில் பாஜக போட்டியிட உள்ள தொகுதிகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது. மேலும் கூட்டணியில் சேராமல் காலம் தாழ்த்தி வரும் பிரேமலதா, ஓபிஎஸ் ஆகியோரை சந்தித்து பியூஷ் கோயல் பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேமுதிக கோரும் தொகுதிகளை கொடுத்தால் மட்டுமே கூட்டணியில் சேருவோம் என்று பிரேமலதா அடம்பிடித்து வரும் நிலையில், மறுபுறம் என்.டி.ஏ. கூட்டணியில் சேர்ந்தால் போதும் என்ற நிலையில் ஓபிஎஸ் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
