சென்னை மெரினா உழைப்பாளர் சிலை முன்பு திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தூய்மை பணியாளர்களை தனியார் மயமாக்குவதை தமிழக அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று முன்தினம் கொருக்குப்பேட்டை பகுதியில் 13 தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர். அப்போது போராட்டத்தை கைவிட மறுத்த தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து நேற்று மாநகராட்சி பின்புறம் மோர் மார்க்கெட் பகுதியில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தூய்மை பணியாளர்களை தனியார்மயம் ஆக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் மெரினா கடற்கரை உள்ள உழைப்பாளர் சிலை முன்பு திரண்ட தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை குண்டுகட்டாக வலுக்கட்டாயமாக கைது செய்து தூக்கிச் சென்றனர். தூய்மை பணியாளர்கள் மற்றும் போலீஸார் இடையே தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டதுடன், சிலர் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்து கீழே விழுந்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version