சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
இந்தியாவின் 77-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னியில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தொடர்ந்து குடியரசு தினத்தையொட்டி பல்வேறு பிரிவுகளில் பதக்கங்கள், விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அதன்படி வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கங்கள் தீயணைப்பு வீரர்கள் சங்கர், சுரேஷ், ரமேஷ்குமார், பீட்டர் ஜான்சன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மேலும் கோட்டை அமீர் மத நல்லிணக்க விருதை கலிமுல்லா மற்றும் வேளாண்மை நலத்துறையின் சிறப்பு விருதை நாராயணசாமி நாயுடுவும் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்கள், சிறந்த போலீஸ் நிலையத்திற்கான கோப்பைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு வழங்கினார். பின்னர், பதக்கம் பெற்றோர் குழுவாக முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
