குறைகளை சுட்டிக்காட்டுவதில் கண்ணியத்தை கடைபிடித்ததற்காக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 17ம் தேதி தொடங்கியது. அன்றைய நாளில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையையும், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டையும் தாக்கல் செய்தனர்.  இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதமும், அமைச்சர்களின் பதிலுரையும் நடைபெற்று வருகிறது.

இன்றைய நாளில் பதிலுரையை புறக்கணித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் யாரும் அவைக்கு செல்லவில்லை. இதனை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் உரையாற்றினார். அப்போது, “கடந்த 5 ஆண்டுகாலத்தில் 5 நிதிநிலை அறிக்கைகள், இந்தாண்டு இடைக்கால பட்ஜெட், வேளாண் பட்ஜெட் ஆகியவை சமர்பித்துள்ளோம். இந்த நேரத்தில் நிதியமைச்சர், வேளாண் அமைச்சர் இருவரும் பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு பதிலுரை வழங்கியிருக்கிறார்கள். அதனை 2 மாதங்களில் மீண்டும் வந்து தொடர்வோம் என்ற நம்பிக்கை தமிழ்நாட்டைப் போல எனக்கும் இருக்கிறது.  எனக்கு தரப்பட்ட பொறுப்பை நான் சிறப்பாக செய்துள்ளேன்.

மீண்டும் ஆட்சிக்கு வந்து நலத்திட்டங்களை தொடர்வோம். திமுக கூட்டணிக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என பிரித்து பார்க்காமல் அனைவருக்காகவும் செயல்பட்டுள்ளோம். சுயமரியாதை எள்ளளவு தீண்டப்பட்டாலும் அதை எதிர்க்கும் வரிசையில் முதல் ஆளாக நான் இருப்பேன். இந்த மிகப்பெரிய வாய்ப்பை தந்த தமிழ்நாடு மக்களுக்கும், என்னை தேர்ந்தெடுத்த கொளத்தூர் தொகுதி மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், ஆளுநருக்கும், எனக்கும் தனிப்பட்ட வேறுபாடு கிடையாது. அவருக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் அவை கண்ணியத்தை கடைபிடித்து குறைகளை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி தலைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version