தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகளை முறைப்படுத்தவும், பொதுமக்களுக்குத் தரமான மருத்துவச் சேவை கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழக சுகாதாரத்துறை மிக முக்கியமான புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் நோயாளிகளிடம் இருந்து வந்த பல்வேறு புகார்களைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகங்கள் உடனடியாக இந்த உத்தரவுகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

அரசு மருத்துவமனைகளின் தூய்மைத் தன்மையை 100% உறுதி செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது, மருத்துவமனைகளில் உள்ள அனைத்து சிகிச்சை வார்டுகள் மற்றும் கழிவறைகள் தொடர்ந்து தூய்மையாகப் பராமரிக்கப்பட வேண்டும். மருத்துவமனை வளாகம் முழுவதும் கிருமி நாசினிகள்  கொண்டு உடனுக்குடன் சுத்தம் செய்யப்பட வேண்டும்.

மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள்  மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளையும், அவர்களது உறவினர்களையும் எவ்விதக் கடினமான வார்த்தைகளும் இன்றி, மிகவும் கண்ணியமான முறையில் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் அல்லது அவர்களது உறவினர்களிடம் இருந்து மருத்துவப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட யாரும் எவ்விதக் காரணத்திற்காகவும் லஞ்சம்  பெறுவதைத் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

லஞ்சம் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக ஏதேனும் புகார்கள் வரும் பட்சத்தில், லஞ்சம் வாங்கிய ஊழியர்கள் மட்டுமின்றி, அதற்குப் பொறுப்பான சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மீதும் துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version