கோவை பாலத்திற்கு பாரத ரத்னா விருது பெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் சி. சுப்பிரமணியம் பெயரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
கொள்கைகளும் பாதைகளும் வெவ்வேறானாலும் மக்களின் நன்மதிப்பைப் பெற்று நாட்டுக்காகப் பணியாற்றிய தலைவர்களைப் போற்றுவதே மாண்பு! ஒன்றிய அமைச்சராகப் பொறுப்பு வகித்து, நாட்டு மக்களின் பசிப்பிணியைப் போக்கிய பசுமைப் புரட்சிக்கு அடித்தளமாக இருந்தவர் மதிப்பிற்குரிய பாரத ரத்னா சி.சுப்பிரமணியம் அவர்கள்.
அவரது புகழொளியைப் பரப்பிட வேண்டும் என மதிப்பிற்குரிய டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் அவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, கோவை மாநகரின் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு ‘சி. சுப்பிரமணியம் மேம்பாலம்’ என்று பெயர்சூட்டும் மகிழ்ச்சிகரமான அறிவிப்பை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்துகொள்கிறேன்.
இவ்வாறு அந்த பதிவில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன், சி. சுப்பிரமணியம் சிரித்து பேசியபோது எடுத்த புகைப்படத்தையும் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
