மேற்கு தமிழகத்தின் கல்விக் கோட்டையாக இருக்கும் கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரி (Government Arts College, Coimbatore), 1852 – ஆம் ஆண்டு ஆங்கில – வெர்னகுலர் பள்ளியாகத் தொடங்கி, 1870 – ல் முதன்மை கல்லூரியாக உயர்ந்தது.
கல்வித் தரத்தால் பெருமை பெற்ற இந்தக் கல்வி நிறுவனத்தை, பலரும் மேற்கு தமிழகத்தின், கிழக்கு கேரளாவின் மற்றும் தெற்கு கர்நாடகாவின் Oxford எனக் குறிப்பிடுவது வழக்கம் தான். இந்த ஆண்டுக்கான சேர்க்கைக்கான விண்ணப்பங்களில் சுமார் 35,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. அதில் மிகத் தேர்ந்த 1,800 மாணவர்கள் சரியான தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டன.
இவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தங்கள் துறைகளை நடத்தும் பேராசிரியர்கள் குறித்த அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், பேராசிரியர்கள் மாணவர்களுக்கு ரோஜா மலர்களை வழங்கி, அன்புடன் வரவேற்று, அவர்களது கல்விப் பயணத்துக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். பூக்களைப் பெற்ற மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வகுப்பறைகளை நோக்கிச் சென்றனர்.
இந்தக் கல்வி நிறுவனத்தில் கல்வி பயின்றோர், இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், போலீஸ் கமிஷனர்கள், தொழில் அதிபர்கள், அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் என சமுதாயத்தின் பல முக்கிய நிலைகளில் விளங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
