மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்த வேண்டும் என்று தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்களிடம் கோரிக்கை வைப்பேன் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து ஆட்சியிலும் அதிகாரத்திலும் அதிக பங்கு வேண்டும் என்ற கோரிக்கைகள் அவ்வப்போது முன்வைக்கப்படுவது, திமுகவின் சில நிர்வாகிகளை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. இதன் பிரதிபலிப்பாக, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் கருத்துகள் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், திமுக – காங்கிரஸ் உறவுகளில் எந்தவித பிளவும் இல்லை என சில திமுக தலைவர்கள் கூறி வந்தாலும், மற்றொரு தரப்பு காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. இந்த சூழலில்தான் மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியில் ஜனவரி 25 ஆம் தேதி நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் அரசியல் ரீதியாக கவனம் பெற்றது.
திமுக மாணவர் அணியின் சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திமுக மாநகர மாவட்டச் செயலாளர் கோ.தளபதி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துப் பேசினார். இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டதும் கூடுதல் முக்கியத்துவம் பெற்றது. மேடையில் பேசிய தளபதி, காங்கிரசில் சிலர் திமுகவின் முயற்சிகளையும் உழைப்பையும் மதிக்காமல் பேசுவதாக குற்றம் சாட்டினார்.
“காங்கிரசில் சிலரைப் பற்றி பெயர் சொல்லி பேச எனக்கு எந்த பயமும் இல்லை. மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றவர்கள் எம்.பியாகிவிட்ட பிறகு, சட்டமன்றத்தில் யார் எம்எல்ஏ ஆனால் என்ன, இல்லாவிட்டால் என்ன என்ற மனநிலையில்தான் இருக்கிறார்கள். இன்று இதில் பங்கு வேண்டும், அதில் பங்கு வேண்டும் என்று பேசுகிறார்கள். இவற்றையெல்லாம் தலைமை புரிந்து, அடுத்த தேர்தலில் அவர்களுக்கு சீட் கூட வழங்கக்கூடாது” என அவர் கூறினார்.
மேலும், இந்தியா கூட்டணியை உணர்வோடு காப்பாற்றி வருவது திமுக தான் என்றும், திமுக இல்லையென்றால் இந்தியா கூட்டணியே உருவாக முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார். டெல்லியில் இந்தியா கூட்டணி குறித்து பேசப்படுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் ஆகிய மூவரே காரணம் எனவும் கூறினார். “இதற்கும் மேல் பல விஷயங்கள் உள்ளன. அவற்றை எல்லாம் வெளிப்படையாக பேசினால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும்” என்றும் அவர் எச்சரித்தார்.
https://x.com/manickamtagore/status/2015712654615294373?
இந்த பேச்சுக்கு உடனடியாக பதிலளித்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்த வேண்டும் என்று தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்களிடம் கோரிக்கை வைப்பேன். தன்மானத்தை காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதிகார திமிருடன் நடந்தால், தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்து விட்டது” என அவர் பதிவிட்டுள்ளார்.
