தமிழக அரசியலில் ‘விசுவாசத்தின் அடையாளம்’ என்றும், ‘அமைதியான அரசியல்வாதி’ என்றும் அறியப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், இன்று ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஒரு சாதாரணத் தொண்டனாகத் தொடங்கி, தமிழகத்தின் உச்சபட்ச பதவியான முதலமைச்சர் நாற்காலி வரை அவர் பயணித்த பாதை வியக்கத்தக்கது.
எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன்: பெரியகுளத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம், ஆரம்பம் முதலே எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருந்தவர். 1982ல் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தைத் தீவிரப்படுத்திய காலத்தில், அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைந்தார். இவரது சுறுசுறுப்பைக் கண்டு, பெரியகுளம் நகர எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச் செயலாளர் பதவியை எம்.ஜி.ஆரே வழங்கினார். 1987-ல் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் கட்சி உடைந்தபோது, ஓபிஎஸ் ஜானகி ராமச்சந்திரன் அணிக்குத் தனது ஆதரவை வழங்கினார்.
கட்சி மீண்டும் இணைந்த பிறகு, ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெறத் தொடங்கினார். 1996ல் உள்ளாட்சித் தேர்தலில் பெரியகுளம் நகராட்சித் தலைவராக வென்று, தனது நிர்வாகத் திறமையை நிரூபித்தார். 2001ல் முதல்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதே, வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை போன்ற முக்கிய அமைச்சரவைப் பொறுப்புகள் அவரைத் தேடி வந்தன.
தொடர் வெற்றி: 2001 முதல் 2021 வரை நடந்த ஐந்து சட்டமன்றத் தேர்தல்களிலும் (2001, 2006, 2011, 2016, 2021) தொடர்ந்து வெற்றி பெற்று ‘தோல்வியே காணாதவர்’ என்ற சிறப்பைப் பெற்றார்.
ஜெயலலிதாவின் ‘நம்பிக்கை நட்சத்திரம்’: ஜெயலலிதா அவர்கள் தன் வாழ்நாளில் அதிகமுறை நம்பிய ஒரு நபர் உண்டென்றால் அது ஓ.பன்னீர்செல்வம் தான். இக்கட்டான நேரங்களில் எல்லாம் ஜெயலலிதா தனது முதலமைச்சர் நாற்காலியில் அமரவைத்த ஒரே நபர் இவரே.
2001-ல் முதன்முதலில் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதே, ஜெயலலிதாவின் கவனிப்புக்கு உள்ளானார் ஓபிஎஸ். அவரது பணிவான குணம் மற்றும் விசுவாசத்தை மெச்சிய ஜெயலலிதா, வருவாய்த்துறை போன்ற முக்கியப் பொறுப்புகளை அவருக்கு வழங்கினார்.
ஜெயலலிதா நீதிமன்ற வழக்குகளால் பதவி விலக நேரிட்ட போதும், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட போதும், தனது நம்பிக்கைக்குரிய ‘பதிலடி’யாக ஓபிஎஸ்-ஐயே தேர்ந்தெடுத்தார். மொத்தம் மூன்று முறை (2001, 2014, 2016) தமிழக முதலமைச்சராகப் பொறுப்பு வகித்து, ஜெயலலிதாவின் நிழலாகச் செயல்பட்டார்.
அப்போது முதலமைச்சர் அறையில் இருந்த ஜெயலலிதாவின் நாற்காலியில் அமர மறுத்து, அதற்குப் பக்கத்தில் ஒரு சாதாரண நாற்காலியில் அமர்ந்து ஆட்சி நடத்தியது, அவரது விசுவாசத்தின் உச்சமாகப் பார்க்கப்பட்டது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெங்களூரு சிறைக்குச் சென்றபோது, இரண்டாவது முறையாகத் தமிழக முதலமைச்சராக ஓபிஎஸ் பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழாவின் போது, தனது தலைவி சிறைக்குச் சென்ற சோகத்தில் ஓபிஎஸ் கண்ணீர் விட்டு அழுத காட்சி, அதிமுக தொண்டர்களிடையே பெரும் உணர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலங்களில், நிதியமைச்சராக பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாகப் பொதுமேடையிலேயே ஜெயலலிதாவின் காலில் விழுந்து ஆசி பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஜெயலலிதா இல்லாத சமயங்களில் கூட, அவரது புகைப்படத்தை மேஜை மீது வைத்தே பணிகளை மேற்கொள்வார்.
ஜெயலலிதா 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, நிர்வாகப் பணிகளை முன்னின்று கவனித்தவர் ஓபிஎஸ். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார்.
எனக்காக எதையும் செய்யக் கூடியவர், எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவர்” என்று ஒருமுறை ஜெயலலிதாவே இவரைப் புகழ்ந்துள்ளார். ஜெயலலிதாவுடனான இந்தப் பயணம்தான் ஓபிஎஸ்-ஐ ஒரு தேசிய அளவிலான அரசியல் அடையாளமாக மாற்றியது.
தர்மயுத்தம் மற்றும் சசிகலா எதிர்ப்பு: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட அதிகாரப் போட்டியில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார். மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தில் அவர் நடத்திய ‘தர்மயுத்தம்’ இந்திய அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்தது.
ஈபிஎஸ் உடனான மோதல்; உச்சகட்ட அரசியல் நெருக்கடி: 2017-ல் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து ஆட்சியையும் கட்சியையும் வழிநடத்தினார். ஈபிஎஸ் முதலமைச்சராகவும், ஓபிஎஸ் துணை முதலமைச்சராகவும் செயல்பட்டனர். ஆனால், 2021 தேர்தல் தோல்விக்குப் பிறகு ‘ஒற்றைத் தலைமை’ விவகாரத்தில் இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது.
எடப்பாடி பழனிசாமி தரப்பால் ஓபிஎஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். “இனி எந்தக் காலத்திலும் ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் இணைக்க முடியாது” என ஈபிஎஸ் திட்டவட்டமாக அறிவித்த நிலையில், தற்போது தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வை ஓபிஎஸ் மேற்கொண்டுள்ளார்.
திமுகவில் இணைப்பு: இப்போதைய சூழலில் அவர் திமுகவில் இணைந்திருப்பது, அந்த நீண்ட கால ‘திராவிட அரசியல்’ வரலாற்றில் ஒரு பெரும் மாற்றமாகக் கருதப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த நீண்ட கால அரசியல் அனுபவம் மற்றும் தென் மாவட்ட செல்வாக்கு, அவர் இப்போது இணைந்துள்ள புதிய அரசியல் பயணத்தில் அவருக்கு எந்த மாதிரியான பலனைத் தரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
