நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்தை, அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் எஸ்.பி. வேலுமணி கே.பி. அன்பழகன் சி.வி. சண்முகம் ஆகியோர் சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் அதிருப்தி எம்எல்ஏக்களாக இருந்து வரும் எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம் உள்ளிட்டோருக்கு அதிமுகவில் புதிய பொறுப்புகளை எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்த நிலையில் அந்த புதிய பொறுப்புகளை ஏற்க மாட்டோம் என்று சாதாரண தொண்டராகவே இருந்துவிடுவோம் என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சென்று பார்ப்பதையும் அவர்கள் தவிர்த்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் சட்டசபையில் பங்கேற்றுள்ள அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் இன்று தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்சி என். ஆனந்தை அவரது அலுவலகத்திற்கு சென்று சந்தித்தனர்.
முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், சி.வி. சண்முகம் ஆகியோர் அமைச்சர் ஆனந்தை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மானியக் கோரிக்கையில் தொகுதிகள் தொடர்பான கோரிக்கைகளை அமைச்சர் புஸ்சி ஆனந்திடம் கொடுத்துள்ளதாக சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
