2026 சட்டமன்றத் தேர்தலுக்காக கனிமொழி எம்.பி. தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம், மே மாதம் நிறைவடைய உள்ளதால், இம்மாநிலங்களில் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு, பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாத துவக்கத்தில் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும்.

இதனையொட்டி, தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்றரை மாதங்களே உள்ளதால், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக இறங்கி உள்ளன. வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக, தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, விருப்ப மனுக்கள் வாங்கும் பணியை துவக்கி உள்ளன. அடுத்த சில நாட்களில், கூட்டணி பேச்சை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளன.

அதன் ஒருபகுதியாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஏற்கனவே தொகுதி வாரியாக சென்று மக்களை சந்தித்து வருகிறார். தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் நடைபயணத்தை துவக்கி உள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தொகுதி வாரியாக கட்சியினரை சந்திப்பதுடன் வேட்பாளர்களையும் அறிவித்து வருகிறார்.
இந்தநிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக எம்.பி. கனிமொழி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அத்தேர்தலில் 40/40 வெற்றி பெற்றது திமுக கூட்டணி. இப்பொழுதும் அவரது தலைமையிலேயே குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிக்கையில், நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பொதுநலச் சங்கங்கள் – வணிக அமைப்புகள் – இளைஞர்கள் – விவசாய அமைப்புகள் – தொழிலாளர் அமைப்புகள் – தோழமை இயக்கத்தினர் மற்றும் பொதுமக்களின் நலன் விழையும் அமைப்புகளுடன் கலந்தாலோசித்திட தலைமைக் கழகத்தால் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், இந்த குழுவில் மூன்று முனைவர் பட்டம் பெற்றவர்கள், ஒரு பேராசிரியர், ஒரு மருத்துவர், ஒரு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி, ஒரு தொழில் முனைவோர் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சரால் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழுவில் கனிமொழி, தமிழரசி உள்ளிட்ட இரண்டு பெண்கள் உள்ளனர். தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவில் அனைத்து மண்டலங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கார்த்திகேய சிவசேனாபதி, எம்.எம். அப்துல்லா, டாக்டர் எழிலன் உள்ளிட்ட அறிவார்ந்த அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் குழுவில் இடம் பெற்றுள்ளனர். முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜி.சந்தானம் அவர்கள் வன்னியர் பொது சொத்து நல வாரியத் தலைவராகவும், CMDA துணைத் தலைவராகவும் இருந்தார். இக்குழுவினர் தமிழ்நாடு முழுக்கவும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்து 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை தயாரிப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை: கனிமொழி கருணாநிதி, (துணைப் பொதுச் செயலாளர்)

டி.கே.எஸ். இளங்கோவன் (செய்தித் தொடர்பு தலைவர்)

கோவி.செழியன் (வர்த்தகர் அணி துணைத் தலைவர்)

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (சொத்து பாதுகாப்புக்குழுச் செயலாளர்)

டி.ஆர்.பி. ராஜா, (தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர்)

எம்.எம். அப்துல்லா, (அயலக அணிச் செயலாளர்)

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் (செய்தித் தொடர்பு செயலாளர்)

எழிலன் நாகநாதன் (மருத்துவ அணிச் செயலாளர்)

கார்த்திகேய சிவசேனாபதி (சுற்றுச்சூழல் அணிச் செயலாளர்)

ஆ. தமிழரசி ரவிக்குமார் (மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர்)

ஜி.சந்தானம், இந்திய ஆட்சிப் பணி அலுவலர் (ஓய்வு)

சுரேஷ் சம்பந்தம் (ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு [Convenor, Dream Tamilnadu])

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version