தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சட்டமன்றத் தேர்தல் பணிகளும், அனல் பறக்கும் பிரச்சாரங்களும் ஒரு வழியாக நிறைவடைந்த நிலையில், அரசியல் தலைவர்கள் தற்போது ஓய்வு எடுக்கும் மனநிலைக்குத் திரும்பியுள்ளனர். கடந்த சில மாதங்களாக ஓய்வின்றி தேர்தல் பணிகளில் சுழன்று வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நான்கு நாட்கள் ஓய்வெடுப்பதற்காக நாளை காலை கொடைக்கானலுக்குப் பயணம் மேற்கொள்கிறார். தனது குடும்பத்தினருடன் செல்லும் அவர், ஏப்ரல் 28-ம் தேதி வரை அங்கிருந்துவிட்டு மீண்டும் சென்னை திரும்புவார் எனத் தெரிகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் செல்லும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஓய்வெடுக்க திட்டமிட்டு கொடைக்கானலுக்கு டூர் செல்லவுள்ளார். இதேபோல், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்தாருடன் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மற்றொரு முக்கிய அரசியல் களமாடிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது நண்பர்களுடன் நெதர்லாந்து அல்லது கனடா நாட்டிற்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார். தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாக அனைவரும் தமிழகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தேர்தல் பரபரப்புகள் நீங்கி, அமைதியான முறையில் ஓய்வெடுக்க அரசியல் தலைவர்கள் கிளம்பியுள்ளதால் தமிழக அரசியல் களம் தற்போது சற்று நிதானமாக உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version