சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின் தமிழகத்தில் தவெக அரசு அமைந்துள்ளது. இருப்பினும் அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது, சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு பிரிவினரும், இபிஎஸ் தரப்பில் ஒரு பிரிவினரும் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக சி.வி.சண்முகம் தலைமையிலான தரப்பினர் வாக்களத்தனர். இதனையடுத்து, அதிமுகவில் 26 மாவட்ட செயலாளர்களை பதவியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து நேற்று இரவு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம் தரப்பினர், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு அதிமுக தொடர் தோல்விகளையே சந்தித்து வருவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். ஜெயலலிதா அவர்கள் அனைவரையும் அரவணைத்துச் சென்று கூட்டணி அமைப்பார். ஆனால், இன்று 1% வாக்கு வைத்திருப்பவர்கள் கூடத் தேவையில்லை என அகங்காரத்துடன் எடப்பாடி செயல்படுவதாகச் சாடினர்.

“200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்” என ஏசி அறையில் அமர்ந்து கொண்டு எடப்பாடி யதார்த்தத்திற்கு மாறாகப் பேசுவதாகக் கூறினர். தவெக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க நிர்வாகிகள் கொடுத்த ஆலோசனைகள் நிராகரிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினர்.

நாடாளுமன்றத் தேர்தலின் போது தேமுதிக-வுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் (எம்.பி பதவி) நிறைவேற்றப்படவில்லை. மீண்டும் அவர்கள் கூட்டணிக்கு வர முயன்றபோதும், எடப்பாடி அவர்களை மதிக்காமல் உதாசீனப்படுத்தியதே பின்னடைவுக்குக் காரணம் எனத் தெரிவித்தனர்.

பாஜக-வுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டு, பின்னர் டெல்லி சென்று யாரிடமும் ஆலோசிக்காமல் கூட்டணியை உறுதி செய்தது ஏன்? என்ற கேள்வியை அவர்கள் எழுப்பியுள்ளனர். 2024 தேர்தலில் பல இடங்களில் டெபாசிட் இழந்து, கட்சி மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதற்கும் எடப்பாடியின் தன்னிச்சையான முடிவுகளே காரணம் என வாதிட்டனர்.

“எடப்பாடி பழனிசாமி சுயமாக இந்தப் பதவிக்கு வரவில்லை; தொண்டர்களாகிய நாங்கள்தான் அவரைத் தேர்ந்தெடுத்தோம். தற்போது பொதுச்செயலாளரின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ள நிலையில், எங்களைக் கட்சியிலிருந்து நீக்க அவருக்கு எவ்வித சட்டப்பூர்வ உரிமையும் இல்லை. அவர் எடுத்த நீக்க நடவடிக்கைகள் செல்லாது என்று கூறினர். மேலும், பொதுச்செயலாளர் கடந்த நான்கு ஆண்டுகளாக நிர்வாகிகளை நீக்குவதிலேயே குறியாக இருந்ததாகவும், கட்சியின் வளர்ச்சியைப் புறக்கணித்ததாகவும் குற்றம்சாட்டினர்

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version