தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆழ்வார் கற்குளம் கிராமத்தில், கழிவுநீர் கால்வாய் அமைப்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரு பிரிவினரிடையே மோதல் உருவானது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதன் தொடர்ச்சியாக, நேற்று இரவு மர்ம நபர்கள் இருவர், செல்லப்பா (74) என்ற முதியவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த முதியவர் உடனடியாக மீட்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்யக் கோரி, ஆத்திரமடைந்த கிராம மக்கள் தூத்துக்குடி – திருநெல்வேலி நெடுஞ்சாலையில் உள்ள வல்லநாடு பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போக்குவரத்தை முற்றிலுமாக முடக்கும் வகையில் மக்கள் திரண்டதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவானது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இருப்பினும், அசம்பாவிதங்களைத் தவிர்க்க அந்தப் பகுதியில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

