கரூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், விபத்து குறித்து காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்’ என்ற பெயரில் 3ஆம் கட்ட பயணமாக நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழப்பு பல்வேறு தரப்பினரும் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின்றனர். ஆளும் திமுக தரப்பினரும், தவெக தரப்பினரும் மாறி, மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், அரசு தரப்பில் தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதற்கிடையில், கரூர் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காவல்துறை தரப்பில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது: “காலை 09.00 மணிக்கு பல்வேறு தொலைக்காட்சிகளில் தமிழக மக்கள் கட்சி தலைவர் விஜய் மதியம் 12.00 மணிக்கு கரூர் வர இருப்பதாக சொன்னதை தொடர்ந்து காலை 10.00 மணியிலிருந்தே பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் பெருமளவில் வர தொடங்கினார்கள்.

இதனால் வேலுச்சாமிபுரம் மெயின்ரோடு, கோவை சாலை, முனியப்பன் கோவில் ஜங்சன், கோவை சாலை, திருக்காம்புலியூர் ரவுண்டானா, மதுரை சேலம் பைபாஸ் ரோடு ஆகிய இடங்களில் கூட்டம் அதிகளவில் வர தொடங்கினார்கள்.

கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கொடுத்த விண்ணப்பத்தில் 10,000 தொண்டர்கள் தான் வருவார்கள் என்று எழுதி கொடுத்துள்ளனர். ஆனால் பிரசாரக் கூட்டத்திற்கு சுமார் 25,000 க்கும் மேற்பட்டோர் வந்தனர்.

இந்நிலையில் மாலை 04.45 மணி சுமாருக்கு தவெக தலைவர் விஜய் கரூர் மாவட்ட எல்லையான வேலாயுதம்பாளையம், தவிட்டுப்பாளையம் வழியாக நுழைந்து வேண்டுமென்றே காலதாமதம் செய்து, தெருவில் அனுமதி இல்லாமல் ரோட்ஷோ, பல்வேறு இடங்களில் நடத்தி போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடைஞ்சல் ஏற்படுத்தி அதிக இடங்களில் நிபந்தனைகளை மீறியும் வரவேற்புகள் நடத்தியும் காலதாமதம் செய்தார்.

மாலை 06.00 மணிக்கு முனியப்பன் கோவில் ஜங்சனில் ராங்ரூட்டில் அதாவது ரோட்டின் வலது புறம் கட்சியின் தலைவர் விஜய் வாகனங்களை அழைத்து சென்று மாலை 07.00 மணிக்கு வேலுச்சாமிபுரம் ஜங்சனில் தொண்டர்களில் கூட்டத்திற்கு நடுவே வாகனத்தை நிறுத்தி சிறிது நேரம் வேண்டுமென்றே காலதாமதம் செய்ததால் அதே இடத்தில் அளவுக்கு அதிகமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தனர்.

அந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூட்டம் அலைமோத செய்து மக்களிடையே தேவையற்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியும் அசாதாரண சூழல்கள் ஏற்பட்டு கூட்ட நெரிசலால் மூச்சுத் திணறல், கொடுங்காயம், உயிர்சேதம் ஏற்படும் என்று தவெக மாவட்ட செயலாளர் மதியழகனிடமும் பொது செயலாளர் புஷி ஆனந்திடமும் மற்றும் இணை செயலாளர் CTR நிர்மல்குமாரிடமும் மற்றும் தவெக நிர்வாகிகள் பலரிடமும் நானும் காவல் துணைக்கண்காணிப்பாளர் பலமுறை எச்சரித்தும் அறிவுரை வழங்கினேன்.

நாங்கள் சொன்னதை கேளாமல் தொடர்ந்து அசாதாரண செயல்களில் ஈடுபட்டதால் போதிய பாதுகாப்பில் போலீசார் வழங்கியபோதும் தவெசு தொண்டர்களுக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகிகள் எவரும் தொண்டர்களை சரிவர ஒழுங்குபடுத்தாமல் ரோட்டில் அருகிலுள்ள கடைகளுக்கு நிழல் தரவேண்டி அமைக்கப்பட்டிருந்த குறுகிய சரிவான தகர கொட்டகைகளிலும் மற்றும் அருகிலிருந்த மரங்களிலும் கட்சி தொண்டர்கள் ஏறி உட்கார செய்ததால் தகர கொட்டகை உடைந்தும் மரம் முறிந்ததால் அதில் உட்கார்ந்திருந்த தொண்டர்கள் கீழே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது சரிந்து விழுந்தது.

இதனால் பொதுமக்களில் பெரும்பாலோனோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. தவெகவின் கரூர் ஏற்பட்டாளர்களுக்கு விஜய்யின் பொதுக்கூட்டத்திற்கு மாலை 03.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரை காவல்துறை அனுமதி வழங்கப்பட்டிருந்தும், குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற கட்டாய நிபந்தனை இருந்த போதிலும், அதிக மக்கள் கூட்டத்தை வெளிப்படுத்தி அரசியல் பலத்தை பறைசாற்றும் நோக்கத்துடன் கட்சி ஏற்பட்டாளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் கரூருக்கு வருவதை நான்கு மணிநேரம் தாமதப்படுத்தியும் அந்த நீண்ட தாமதத்தின் காரணமாக அங்கு பலமணி நேரங்களாக காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெயிலிலும் தாகத்திலும் சோர்வடைந்தனர்.

நீண்ட நேர காத்திருப்பு போதுமான தண்ணீர் மற்றும் மருத்துவ வசதி இல்லாமல் அதிக கூட்டம் காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தால் மக்களின் உடல்நிலையில் சோர்வடைவு ஏற்பட்டது. இதன் விளைவாக மேற்படி சம்பவத்தில் அதிகளவில் மிதிபடுதல் ஏற்பட்டு அதனால் 11 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

மேலும் பலருக்கு காயங்கள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version