தமிழகத்தையே அதிரவைத்த வேங்கைவயல் குடிநீர்த் தொட்டி விவகாரத்தில், மூன்று ஆண்டுகள் கடந்தும் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படாததைக் கண்டித்து, அக்கிராம மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துள்ளனர். கடந்த 2022-ம் ஆண்டு நடந்த அந்த கொடூரச் சம்பவத்தில் இதுவரை நீதி கிடைக்கவில்லை என்றும், மாறாக பாதிக்கப்பட்ட மக்கள் மீதே சந்தேகப் பார்வை திருப்பப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதன் வெளிப்பாடாக, இன்று வாக்குப்பதிவு தொடங்கியும் அந்த கிராமத்திலிருந்து ஒரு வாக்காளர் கூட வாக்குச்சாவடி பக்கம் தலைவைக்கவில்லை.

அரசியல் கட்சிகளின் பாராமுகம் தங்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியுள்ளதாகக் கூறும் வேங்கைவயல் மக்கள், தற்போதைய ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடங்கி, புதிதாக உருவெடுத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் வரை எந்தவொரு கட்சியும் தங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவோ அல்லது வாக்கு கேட்கவோ வரவில்லை எனத் தெரிவிக்கின்றனர். கிராமத்தின் நுழைவாயிலில் கருப்புக் கொடிகளுடன் திரண்டிருக்கும் மக்கள், “எங்கள் வாழ்வாதாரமும் கௌரவமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள நிலையில், யாருக்காக நாங்கள் வாக்களிக்க வேண்டும்?” என ஆவேசமாக கேள்வி எழுப்புகின்றனர்.

ஏற்கனவே கடந்த நாடாளுமன்றத் தேர்தலையும் புறக்கணித்திருந்த இந்த மக்கள், தற்போது சட்டமன்றத் தேர்தலிலும் அதே முடிவை எடுத்துள்ளது அரசு நிர்வாகத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும், தங்களுக்கு முறையான நீதி கிடைக்கும் வரை வாக்களிக்கப் போவதில்லை என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். புதுக்கோட்டை வேங்கைவயல் மற்றும் நெல்லை நாங்குநேரி பெரும்பத்து எனத் தமிழகத்தின் இருவேறு பகுதிகளில் மக்கள் நீதிக்காகத் தேர்தலைப் புறக்கணித்திருப்பது இந்தத் தேர்தல் களத்தில் ஒரு முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version