தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட 16 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய மூன்று மையங்களிலும் ‘கழுகுப்பார்வை’ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் தலைமையில், கூடுதல் மற்றும் இணை ஆணையர்களின் நேரடி மேற்பார்வையில், 22,000-க்கும் மேற்பட்ட போலீசார் சென்னை முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சில சமூக விரோத சக்திகள் திட்டமிட்டு கலவரங்களை தூண்டக்கூடும் என்ற உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, இந்த வரலாறு காணாத முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றி ‘மும்முனை பாதுகாப்பு வளையம்’ அமைக்கப்பட்டுள்ளது. மையத்தின் வெளிப்புறத்தில் இருந்தே தீவிர சோதனைகள் தொடங்குகின்றன. தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ புகைப்பட அடையாள அட்டை இல்லாத எவரும் மையத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நுழைவாயில்களில் உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஒவ்வொரு நபரும் பலகட்ட சோதனைகளுக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவர். அதேபோல், மது அருந்திய நபர்கள் எக்காரணம் கொண்டும் வளாகத்திற்குள் நுழைய முடியாது என்றும், மீறினால் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை தரப்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மையங்களுக்குள் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பார்வையாளர்களைத் தவிர வேறு எவரும் அலைபேசி கொண்டு செல்ல அனுமதி கிடையாது. ஊடகவியலாளர்கள் கேமராக்களை குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே கொண்டு செல்ல முடியும். மேலும், தீப்பெட்டி, லைட்டர், கூர்மையான ஆயுதங்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய திரவங்களை எவரும் உள்ளே கொண்டு வராதபடி மெட்டல் டிடெக்டர்கள் மூலம் தீவிரமாகச் சோதிக்கப்படும். ஒருமுறை வெளியே செல்லும் முகவர்கள் மீண்டும் உள்ளே நுழைய அனுமதி கிடையாது என்பதால், மையத்திற்குள்ளேயே குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திற்கும் ஒரு கூடுதல் ஆணையர் தலைமையில், 2 இணை ஆணையர்கள் மற்றும் 3 துணை ஆணையர்கள் அடங்கிய உயர்மட்டக் குழு பாதுகாப்புப் பணிகளை ஒருங்கிணைக்கிறது. மத்திய ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை வீரர்களும் இந்த பாதுகாப்புப் பணியில் இணைந்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்படும் வரை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள். இதனால் சென்னை மாநகரம் முழுவதும் தற்போது காவல்துறையின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
