தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகை திரிஷா, தனது பிறந்தநாளான மே 4-ஆம் தேதியை முன்னிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவுகள், தமிழக அரசியல் சூழலோடு முடிச்சுப் போடப்பட்டு இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி முடிவடைந்த நிலையில், அதன் முடிவுகள் வெளியாகும் அதே மே 4-ஆம் தேதியன்று திரிஷாவின் பிறந்தநாள் வருவதுதான் இந்த விறுவிறுப்பிற்குக் காரணம். குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் வருகைக்கும் திரிஷாவின் பதிவுகளுக்கும் இடையே ரசிகர்கள் “கோட் வேர்ட்” கனெக்ஷன்களைத் தேடி வருகின்றனர்.

சமீபத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்த திரிஷா, அதற்கு “மே (மீ) சீசன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவிட்டது” (May-Me season officially begins) என்று தலைப்பிட்டுள்ளார். ஏற்கனவே வாக்குப்பதிவு தினத்தன்று ‘கில்லி’ படத்தின் ‘அர்ஜூனரு வில்லு’ பாடலைப் பின்னணியில் ஒலிக்கச் செய்து புகைப்படம் வெளியிட்டிருந்த திரிஷா, தற்போது அரியணை மற்றும் கிரீடம் குறித்த பாடல்களைத் தனது பதிவுகளில் இணைத்து வருவது பேசுபொருளாகியுள்ளது. இதனைப் பார்க்கும் ரசிகர்கள், “நீங்கள் என்னை கிரீடத்தில் பார்க்க வேண்டும்” (You should see me in a crown) என்ற பாடலின் வரிகளை வைத்து, அவர் சூசகமாகத் தனது அரசியல் விருப்பத்தையோ அல்லது த.வெ.க-வின் வெற்றிக் கணிப்பையோ வெளிப்படுத்துகிறாரோ என விவாதித்து வருகின்றனர்.

தமிழக அரசியல் களம் தற்போது தேர்தல் முடிவுகளுக்காகவும், விஜய்யின் த.வெ.க முதல் தேர்தலிலேயே ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்தும் ஆவலாகக் காத்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில், தேர்தல் முடிவுகள் வெளியாகும் அதே மே 4-ஆம் தேதியை ‘தனக்கான சீசன்’ என திரிஷா குறிப்பிட்டிருப்பது ரசிகர்களிடையே சுவாரஸ்யமான கற்பனைகளை உருவாக்கியுள்ளது. “கோட் வேர்ட் அக்சப்ட்” போன்ற கமெண்ட்டுகளால் இணையம் நிரம்பி வரும் நிலையில், இந்தத் தேதி ஒற்றுமை ஒரு தற்செயல் நிகழ்வா அல்லது ஏதேனும் முக்கிய அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் அதிகரித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version