திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நள்ளிரவு நேரத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவரை, கஞ்சா வழக்கில் தொடர்புடைய கும்பல் வீடு புகுந்து பாட்டிலால் சரமாரியாகக் குத்திய சம்பவம் டெல்டா மாவட்டங்களில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

முத்துப்பேட்டை முகைதீன் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஹாஜா முகைதீன். இவர் தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் முத்துப்பேட்டை வட்டார செய்தியாளராகப் பணியாற்றி வருகிறார். நேற்று (மே 18) இரவு தனது செய்திப் பணிகளை முடித்துவிட்டு, வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார்.

நள்ளிரவு சுமார் 11:45 மணியளவில் இவரது வீட்டின் கதவு தட்டப்பட்டுள்ளது. கஞ்சா வழக்கில் கைதாகி சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்திருந்த அப்துல் பாசித் என்பவன், மேலும் இருவருடன் சேர்ந்து அங்கு வந்துள்ளான்.

அண்ணே, உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்” என அந்தக் கும்பல் அழைத்ததும், ஹாஜா முகைதீன் வாசலுக்கு வந்து விபரம் கேட்டுள்ளார். அதற்கு அப்துல் பாசித், “என்னை கோவிலூரைச் சேர்ந்த ஒருவர் தாக்கிவிட்டார். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை, நீங்கள் வந்து பேசுங்கள்” எனக் கூறியுள்ளான்.

இதனை நம்பி ஹாஜா முகைதீன் கதவைத் திறந்து வெளியில் வந்த அடுத்த கணமே, அந்த கும்பல் தங்களது கொடூர முகத்தைக் காட்டியுள்ளது. அப்துல் பாசித் தான் மறைத்து வைத்திருந்த கண்ணாடிப் பாட்டிலை எடுத்து, செய்தியாளர் ஹாஜா முகைதீனின் தலையில் பலமாக அடித்துள்ளான். மேலும், அவனுடன் வந்த கும்பல் ஹாஜா முகைதீனின் தலை, நெஞ்சு மற்றும் உடலின் பல பகுதிகளில் கண்ணாடிப் பாட்டிலால் சரமாரியாகக் குத்திவிட்டு, அவரது செல்போனையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியது.

இரத்த வெள்ளத்தில் சரிந்த ஹாஜா முகைதீனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் அவரை மீட்டு உடனடியாக முத்துப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், காயம் மிகவும் ஆழமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பத்திரிகையாளர் ஒருவரை நள்ளிரவில் வீடு புகுந்து, கஞ்சா கும்பல் தாக்கிய கொடூரச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் முத்துப்பேட்டை பகுதி மக்களிடையே கடுமையான அச்சத்தையும், பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய கஞ்சா கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version