தமிழகத்தில் தங்கம் விலை இதுவரை கண்டிராத வகையில் ஒரே நாளில் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிரடியாக உயர்த்தியுள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும். இதன் விளைவாக, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.1,070 உயர்ந்து ரூ.15,400-க்கும், சவரனுக்கு ரூ.8,560 உயர்ந்து ரூ.1,23,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அதிரடி மாற்றத்தால் நகை வாங்குவோர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 230 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,330-க்கும், சவரனுக்கு 1,840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,640-க்கும் விற்பனையானது. தங்கத்தை போல் வெள்ளியும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 300 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையானது
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை பாதுகாக்கவும், நடப்பு கணக்கு பற்றாக்குறையைக் குறைக்கவும் மத்திய நிதியமைச்சகம் இந்த வரி உயர்வை அமல்படுத்தியுள்ளது. உலகளாவிய பொருளாதார சூழல் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், உள்நாட்டில் தங்கத்தின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவதால், வரும் நாட்களில் நகை சந்தையில் விற்பனை சரிவடையக்கூடும் என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதேபோல் வெள்ளி விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 30 அதிகரித்து ரூ.330க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.30,000 அதிகரித்து ரூ.3,30,000க்கும் விற்பனையாகிறது.
