தமிழகத்தின் பல முக்கிய பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் குறைந்துள்ளதாக வெளியான தகவல்களை சுட்டிக்காட்டி, தமிழக அரசை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) பதிவில், தலைநகர் சென்னையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் தினசரி சுமார் 16 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் பால் விநியோகம் தற்போது 13.5 லட்சம் லிட்டராக குறைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
முந்தைய ஸ்டாலின் அரசும், தற்போதைய முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசும் ஆட்சிக்கு வந்தவுடன் மக்களின் அடிப்படைத் தேவைகளிலேயே கை வைப்பதாக குற்றம்சாட்டிய அவர், சில வாரங்களுக்கு முன்பு ஆவின் கிரீன் மேஜிக் பால் உற்பத்தி படிப்படியாகக் குறைக்கப்படுவதாக பாஜக சுட்டிக்காட்டியபோது, அரசுக்கு ஆதரவாக பேசியவர்கள் தற்போது என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக அளவில் பால் கொள்முதல் செய்வதற்குப் பதிலாக, ஆவின் உற்பத்தியை அதிகரிக்க அரசு தவறிவிட்டதாகவும், இது நிர்வாகத் தோல்வி என்றும் அவர் விமர்சித்தார்.
அமுல் உள்ளிட்ட பிற மாநில அரசுகளின் பால் கூட்டுறவு நிறுவனங்களின் செயல்பாடுகளை முன்மாதிரியாகக் கொண்டு, தமிழகத்தில் ஆவின் பால் உற்பத்தி மற்றும் விநியோகத்தை தடையின்றி மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
