அதிமுக-வின் மூத்த தலைவரும், கட்சியின் அமைப்புச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் செம்மலை, அதிமுகவிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் முடிந்து அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் நிலையில், செம்மலையின் இந்த முடிவு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் பொதுக்குழுவை கூட்ட வேலுமணி தரப்பு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மொத்தமுள்ள 1800 பொதுக்குழு உறுப்பினர்களில் 1,050 பேர் பொதுக்குழுவை கூட்ட கையெழுத்திட்டுள்ளனர். 59% உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதால் பொதுக்குழுவை கூட்ட எடப்பாடிக்கு அழுத்தம் கொடுக்க திட்டமிட்டுள்ளனர்,
இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த பேரதிர்ச்சியாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வலுவான அரசியல் செல்வாக்கு கொண்ட செம்மலை அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வருத்தத்துடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் அடுத்தடுத்து நடைபெறும் நிகழ்வுகள் எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளன.
இதே மனநிலையில் தான், இயக்கம் தொடங்கிய நாளிலிருந்து இந்த இயக்கத்திற்காக உழைத்து வரும் லட்சக்கணக்கான தொண்டர்களும் இருந்து வருகிறார்கள்.
நடந்த சம்பவங்களும், நடக்கும் சம்பவங்களும் எதுவுமே திருப்தி அளிப்பதாக இல்லை. மாறாக, பெரும் கவலையையே அளித்து வருகின்றன.புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் உருவாக்கிய இயக்கம், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் காப்பாற்றிய இயக்கத்திற்கு இந்தக் கதியா? ‘கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா! நோகுதய்யா; மனசு நோகுதய்யா’ என்ற உள்மனதின் வெளிப்பாடு இப்போது எல்லோருக்கும் பொதுவானதாகிவிட்டது.
‘உட்கட்சி சண்டையால் அதிமுக அசிங்கப்படுகிறது’ என்று பிரபல ஆங்கில நாளிதழ்கள் பரிகாசம் செய்யும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துவிட்டது.” எனவும் தெரிவித்தார்.
மேலும், “புரட்சித் தலைவர் அவர்களும், புரட்சித் தலைவி அவர்களும் எனக்கு எவ்வளவோ வாய்ப்புகளை வழங்கியதோடு, அரசியலில் நிலையான ஓர் அங்கீகாரத்தையும் உருவாக்கித் தந்தார்கள். அந்த நன்றிக்கடனாக, மறைந்த அந்த ஆளுமை மிக்க இரு பெரும் தலைவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த இயக்கத்திற்கு எனது அனுபவம் பயன்பட வேண்டும் என்று சுயநலமின்றி தொடர்ந்து பணியாற்றி வந்தேன்.
ஆனால், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு எனக்கு பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டன, தடுக்கப்பட்டன. அதைப் பற்றி கூட நான் கவலைப்படவில்லை. எனது ஆதங்கத்தை வெளிக்காட்டாமல் தலைமைக்கு கட்டுப்பட்டு தொடர்ந்து பணியாற்றி வந்தேன்.இப்போது உருவாகியுள்ள சூழ்நிலைகளைப் பார்க்கும்போது, இந்த இயக்கத்தில் தொடர்ந்து பயணிக்க என் மனம் இடம் தரவில்லை. மனம் வேதனைப்படுகிறது.” எனவும் கூறியுள்ளார்.
அதே சமயம், “புரட்சித் தலைவர்களின் ஆன்மாக்களிடம் மன்னிப்புக் கோரி, கனத்த இதயத்தோடு நான் வகிக்கும் பொறுப்பிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகிக் கொள்கிறேன்” என செம்மலை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் தொடரும் உள்கட்சி பிளவு மற்றும் மோதல்களுக்கு மத்தியில், மூத்த தலைவரான செம்மலையின் இந்த விலகல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
