விஜய் எனது நண்பர் தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் சூலூரில் புதன்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, இன்று அரசியலில் பலர் புதிய அவதாரம் எடுத்து வருகிறார்கள். குறிப்பாக தம்பி விஜய் அவர்கள் கட்சித் தொடங்கி அரசியலுக்கு வந்துள்ளார். எனக்கு நடிகர் விஜய் ஒரு நல்ல நண்பர், அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஒரு காலகட்டத்தில் அவரது திரைப்படம் வெளியாக முடியாமல் பெரும் சிக்கலில் இருந்தபோது, நானே முன்நின்று அன்றைய முதலமைச்சர் எடப்பாடி அவர்களை எனது காரிலேயே அழைத்துச் சென்று, அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு படம் வெளியாக உதவி செய்தேன். ஆனால், தனிப்பட்ட நட்பு என்பது வேறு, மக்கள் பணி என்பது வேறு.

ஒருவர் தன்னை ‘மக்கள் தலைவன்’ என்று பிரகடனப்படுத்திக் கொண்டு வரும்போது, அவருக்கு முதல் கடமை மக்களின் உயிரைப் பாதுகாப்பதாகத்தான் இருக்க வேண்டும். அண்மையில் கரூரில் நடைபெற்ற சம்பவத்தின் போது, அவரது சொந்தக் கட்சியைச் சேர்ந்த 41 நிர்வாகிகள் உயிரிழந்துள்ளனர். பல குடும்பங்களில் ஒரே ஒரு வாரிசாக இருந்த சகோதரிகள் கூட அந்தத் துயரத்தில் பலியாகியுள்ளனர். ஆனால், அங்கே வந்த அவர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்காமலும், மருத்துவமனைக்குச் சென்று கூடப் பார்க்காமலும் சென்றது எந்த விதத்தில் நியாயம்? உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களைத் தேடிச் சென்று ஆறுதல் கூற வேண்டியது ஒரு தலைவனின் கடமையல்லவா? இதை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பதை அவர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அதிமுக என்பது தொண்டர்களுக்கான இயக்கம். இங்கே கிடைக்கும் மரியாதையும் அங்கீகாரமும் வேறு எங்குமே கிடைக்காது. இன்று ஆசை வார்த்தைகளை நம்பி மாற்று முகாம்களுக்குச் செல்பவர்கள், அங்கே உரிய மரியாதை இல்லாததால் மீண்டும் நமது இயக்கத்திற்கே திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, விஜய்யின் கட்சியில் இணைந்தவர்கள் கூட இன்று அங்கிருந்து விலகி அதிமுகவிற்கு வரத் தயாராக உள்ளனர். அவர்களுக்கு உரிய பதவிகளையும் மரியாதையையும் வழங்கி அரவணைக்க நமது கழகம் எப்போதும் தயாராக இருக்கிறது.

திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளுக்கு நீங்கள் அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகளாக மாறுவது மட்டுமல்லாமல், அது எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆபத்தாகவும் முடியும். எனவே, மக்களுக்காகத் தொடர்ந்து உழைக்கும் நமது இரட்டை இலை இயக்கத்தின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

 

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version