மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மறுதேர்வு நடத்தக் கோரி 16 மாணவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளில் தேர்வு மையத்தின் சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 4ம் தேதி நடத்தப்பட்டது. அன்றைய தினம் சென்னையில் பெய்த கடும் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தங்களால் முறையாக தேர்வு எழுத முடியவில்லை எனக்கூறி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்களும், குன்றத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 2 மாணவர்களும், கே கே நகர் பத்ம ஷேசாச்திரி 1 மாணவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, மத்திய அரசு நடத்திய விசாரணையில் எடுக்கப்பட்டுள்ள முடிவு நியாயமானது என்றும் 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ள நிலையில் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் அது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து மாணவர்கள் சார்பில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், குறிப்பிட்ட தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய
470 மாணவர்களில் 13 பேர் மட்டுமே நீதிமன்றத்தை நாடியுள்ளதாக கூறினார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எத்தனை மாணவர்கள் என்று பார்க்காமல் ஒரு மாணவர் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென கூறினார்.
மேலும் , தேர்வு மையத்தின் சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஜூன் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கவும் மறுப்பு தெரிவித்தனர்.