தமிழகத்தில் கோடை விடுமுறை தொடங்கிவிட்ட நிலையில், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுவதைக் கட்டுப்படுத்தவும், அதன் மூலம் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழக காவல்துறை மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, இனி சிறார்கள் வாகனம் ஓட்டிப் பிடிபட்டால், அந்தச் சிறுவர்கள் மீது மட்டுமல்லாமல், வாகனத்தை ஓட்ட அனுமதித்த பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர்கள் மீது நேரடி நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி, சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்ட விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களின் பதிவுச் சான்றிதழ் (RC) ஒரு வருட காலத்திற்கு ரத்து செய்யப்படும். மேலும், விதிகளை மீறும் சிறுவர்களின் எதிர்கால ஓட்டுநர் உரிமத்திற்கும் தடை விதிக்கப்படும். பிடிபடும் சிறுவர்கள் தங்களுக்கு 25 வயது நிறைவடையும் வரை ஓட்டுநர் உரிமம் கோரி விண்ணப்பிக்க முடியாது. இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்கள் மீதான வழக்குகள் ‘சிறார் நீதி வாரியத்தின்’ முன்னிலையில் விசாரிக்கப்படும் என்பதால், இது அவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் சான்றிதழ்களிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.
சென்னையில் சமீபகாலமாகச் சிறார்கள் வாகனங்களை இயக்கி விபத்துகளை ஏற்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், போக்குவரத்துப் போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, அடையாறு பகுதியில் நடந்த ஒரு விபத்தில், வாகனத்தை ஓட்டிய சிறுவனின் நண்பரது தந்தையே கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வை போலீசார் உதாரணமாகச் சுட்டிக்காட்டுகின்றனர். “பிள்ளைகளின் ஆர்வத்திற்காக வாகனங்களைக் கொடுத்து அவர்களின் உயிரையும் உங்கள் சுதந்திரத்தையும் பறிக்காதீர்கள்” எனப் பெற்றோர்களுக்குக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
