தமிழகத்தில் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. தொடர்ந்து ஆட்சிக்கு வந்த பிறகு 2023ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு சார்பில் மகளிர் உரிமை தொகையாக தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒவ்வொறு மாதமும் 15ம் தேதி அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 1.16 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில், தற்போது தமிழகத்திற்கு தேர்தல் நெருங்கும் வேளையில் கடந்த 14ம் தேதி காலை மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு ரூ.5000 பெண்களுக்கு வரவு வைத்தது. இதனால் தமிழக பெண்கள் பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நேற்றைய நாளில் எதிர்க்கட்சிகளுக்கும், அமைச்சர்களுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இன்று பேரவையில் இடைக்கால பட்ஜெட் மீதான பதிலுரை நடைபெற்று வருகிறது. அதிமுக புறக்கணித்துள்ள நிலையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை வழங்கிவருகிறார். அப்போது, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறுத்தவேண்டும் என்று யாராவது நினைத்தால் தமிழ்நாடே கொந்தளிக்கும் என்றார்.

மேலும் அந்த கொந்தளிப்பு இருக்கும்வரை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் தமிழ்நாட்டை ஆள்கிறார் என்பது பொருள் எனக் கூறி, முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை பாணியில் தங்கம் தென்னரசு பேசியுள்ளார். மேலும் முதலமைச்சராக ஸ்டாலின் வந்திருப்பது தமிழ்நாட்டுக்கு கிடைத்த வரப்பிரசாதம் எனவும் அவர் புகழாரம் சூட்டினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version