நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என மத்திய அரசு உத்தரவிடவில்லை என நிர்மலா சீதாராமன் கூறியதற்கு ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

நெல் சாகுபடி தொடர்பாக நிர்மலா சீதாராமன் பதிவிட்டுள்ள எக்ஸ் தள பதிவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்வினையாற்றி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நிர்மலா சீதாராமன் அவர்களே, “நெல்லுக்குத் தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையால் விளைச்சல் பெருகிக் கொண்டே போகிறது. எனவே, இந்த ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும்” எனத் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளருக்குத் தங்களின் அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் மிகத் தெளிவாகவே உள்ளது.

கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. அப்படி, பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தற்போது மாநில அரசால் தரப்படும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்யுமாறும், நெல்லுக்கு இத்தகைய ஊக்கத்தொகை வழங்குவதை நிறுவத்துவது தொடர்பாகப் பரிசீலனை செய்யவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தங்களுடைய இந்தப் பதிவில், “குறைந்தபட்ச ஆதார விலையைத் தாண்டி ஊக்கத்தொகை வழங்குவது மாநில அரசின் முடிவு எனவும், அதனை யாரும் பறிக்கவில்லை” என்றும் கூறியிருக்கிறீர்கள்.

தங்களது கூற்று உண்மைதானென்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா? என்றும் முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version