மத்திய கிழக்கில் பிப்ரவரி 28 முதல் நீடித்து வரும் போர், தற்போது வளைகுடா நாடுகளில் பணியாற்றி வரும் இந்தியர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இன்று (மார்ச் 30) அதிகாலை குவைத்தில் உள்ள நீர் சுத்திகரிப்பு மற்றும் மின் உற்பத்தி நிலையத்தை இலக்காகக் கொண்டு ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த இந்தியத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

விசாரணையில் அவர் தமிழகத்தைச் சேர்ந்த 40 வயதான சந்தான செல்வம்  என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குவைத்தின் மின்சார அமைச்சக செய்தித் தொடர்பாளர் பாத்திமா அப்பாஸ் ஜவஹர் ஹயாத் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், கொளத்தூரைச் சேர்ந்த 40 வயதான சந்தான செல்வம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஷுவைபா ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளியாகப்  பணிபுரிந்த அவர், தாக்குதல் நடந்தபோது இரவுப் பணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம்,வெளியிட்டுள்ள அறிக்கையில், “சந்தான செல்வத்தின் அகால மரணம் பெரும் வேதனையை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் துயரமான நேரத்தில் அவரது குடும்பத்திற்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கத் தூதரகம் தயாராக உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்த சந்தான செல்வத்தின் உடலைத் தாயகம் கொண்டு வருவதற்கான சட்டப்பூர்வமான நடைமுறைகளை விரைவுபடுத்தக் குவைத் நாட்டு அதிகாரிகளுடன் இந்தியத் தூதரகம் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்குவதோடு, இந்த இக்கட்டானச் சூழலில் அவரது குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் தூதரகம் உடனுக்குடன் வழங்கி வருகிறது.

செல்வத்தின் மரணத்தைத் தொடர்ந்து, நடைபெற்று வரும் மேற்கு ஆசிய மோதலில் உயிரிழந்த இந்தியர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது . அதாவது, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியாவில் தலா ஒருவர், ஓமானில் இருவர், மற்றும் வர்த்தகக் கப்பல்களில் மூவர் என உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, இடைமறிக்கப்பட்ட ஏவுகணைகளின் சிதறல்கள் தெருவில் விழுந்ததில் அபுதாபியில் உயிரிழந்த இருவரில் ஒரு இந்தியரும் அடங்குவார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version