ஜனநாயகன் திரைப்படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட 9 பேரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகன், பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், தணிக்கை வாரியத்தின் நடவடிக்கை காரணமாக படம் வெளியாவதில் வழக்கு, தாமதம் உள்ளிட்ட பிரச்சனைகளை சந்தித்தது. இதனிடையே தணிக்கை மறு ஆய்வு குழு முன்பு படம் ஆய்வில் உள்ள நிலையில், ஏப்ரல் 3ம் தேதி சட்டவிரோதமாக ஜனநாயகன் திரைப்படம் இணையதளத்தில் வெளியானது.

இதுதொடர்பாக படத்தை தயாரித்த கே.வி.என். புரொடக்ஷன்ஸ் அளித்த புகாரில், 21 பேர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, 9 பேரை கைது செய்தனர். இவர்கள் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள், கோடை விடுமுறை கால நீதிபதி ஆர்.சக்திவேல் முன்பு விசாரணைக்கு வந்தது.
கைதாகி 42 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளதாகவும், முக்கிய குற்றம்சாட்டப்பட்ட சிலர் மீது ஏற்கனவே குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாகவும், ஆர்வத்தில் தான் படத்தை பார்த்ததாகவும், சமூக வலைதளங்களில் பகிரவில்லை என்றும் இதனால், ஜாமின் வழங்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில், வாதிடப்பட்டது.
ஜாமின் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்த ஜனநாயகன் படத்தை தயாரித்த கே.வி.என். புரொடக்சன்ஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், 400 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படத்தில், 2000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து உள்ளதாகவும், சட்டவிரோதமாக இணையத்தில் படம் வெளியானதால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது. மேலும், ஆர்வத்தில் திரைப்படத்தை பார்த்துவிட்டோம் என்று மனுதாரர்கள் கூறுவதை ஏற்று கொள்ள முடியாது என்றும் கைதானவர்களுக்கு ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்க கூடும் என்றும் எனவே ஜாமின் வழங்க கூடாது என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர்கள் எவருக்கும் ஜாமின் வழங்க கூடாது என காவல்துறை தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஜனநாயகன் படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தொடர்பான ஆதாரங்கள் மற்றும் வழக்கு விசாரணை ஆவணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்.சக்திவேல், 9 பேரின் ஜாமின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
