திமுக கூட்டணியில் கடந்த முறையை விட இரண்டு இடங்கள் குறைக்கப்பட்டு, இந்த முறை மதிமுகவிற்கு 4 சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 3 தொகுதிகளில் ‘உதயசூரியன்’ சின்னத்திலும், ஒரு தொகுதியில் மதிமுகவின் ‘தீப்பெட்டி’ சின்னத்திலும் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்நிலையில், வைகோ மற்றும் துரை வைகோ தலைமையிலான மதிமுக, தாங்கள் போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் அடங்கிய உத்தேசப் பட்டியலை திமுகவிடம் வழங்கியுள்ளது. இந்தப் பட்டியலில் மதுரை தெற்கு, திருச்சி கிழக்கு, வேளச்சேரி, மணப்பாறை, சாத்தூர், கோவில்பட்டி, கிணத்துக்கடவு, நெல்லை, பாளையங்கோட்டை, கடலூர் அல்லது புவனகிரி ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
இதில் மதிமுகவிற்கு எந்தத் தொகுதிகள் கிடைக்கும் என்பதைப் பார்த்தால், கடந்த முறை மதிமுக வென்ற மதுரை தெற்கு மற்றும் சாத்தூர் ஆகிய தொகுதிகள் மீண்டும் அவர்களுக்கே ஒதுக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அதேபோல், திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் துரை வைகோ எம்.பி-யாக இருப்பதால், அங்குள்ள திருச்சி கிழக்கு அல்லது மணப்பாறை ஆகிய இரண்டில் ஒன்றை மதிமுகவிற்கு விட்டுக்கொடுக்க திமுக முன்வரலாம். இருப்பினும், வேளச்சேரி தொகுதியை காங்கிரஸ் கேட்டுள்ளதாலும், நெல்லை மற்றும் பாளையங்கோட்டை தொகுதிகளில் திமுக நேரடியாகப் போட்டியிட விரும்புவதாலும் அந்த இடங்கள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இறுதிப் பட்டியல் வெளியாகும் போது தென் மாவட்டங்களில் இரண்டு மற்றும் டெல்டா அல்லது மத்திய மண்டலத்தில் தலா ஒரு தொகுதிகள் என நான்கு இடங்கள் மதிமுகவிற்கு உறுதி செய்யப்படலாம்.
இதேபோல், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிபிஐ, தற்போதைய CPI சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் தளி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட 10 தொகுதிகளின் பட்டியலை வழங்கி இருக்கிறது. அதில் நாகை, வால்பாறை, தொண்டாமுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருப்பூர், பவானி சாகர், பழனி, சிவகங்கை தொகுதிகளை வழங்கி இருக்கின்றனர். சில நாட்களில் தொகுதி ஒதுக்கீடு செய்யும்போது அழைத்து பேசுவதாக திமுக தலைமை தெரிவித்துள்ளது.
2021ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக கூட்டணியில் போட்டியிட்ட தொகுதிகள்
தளி (தனி)
திருப்பூர் வடக்கு
பவானிசாகர்
சிவகங்கை
வால்பாறை
திருத்துறைப்பூண்டி ஆகியவை ஆகும்.
