கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நடப்பு பருவத்தில் மாம்பழங்களுக்குப் போதிய விலை கிடைக்காததால், விரக்தியடைந்த விவசாயிகள் டன் கணக்கிலான மாங்காய்களை ஆங்காங்கே சாலை ஓரங்களில் கொட்டிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 33 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் மே மற்றும் ஜூன் மாதங்களில் மா விளைச்சல் தீவிரமடைந்து, அறுவடைப் பணிகள் நடைபெறும். இந்த ஆண்டும் மா விளைச்சல் நல்ல முறையில் உள்ள நிலையில், சந்தையில் நிலவும் கடும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில், மாங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ. 12 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், மாவட்ட நிர்வாகத்தின் இந்த உத்தரவை மாங்கூல் தொழிற்சாலை வியாபாரிகள் மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அவர்கள் விவசாயிகளிடமிருந்து கிலோ ரூ. 3 மட்டுமே மிகக் குறைந்த விலைக்கு மாங்காய்களைக் கொள்முதல் செய்து வருகின்றனர்.
இதனால் மாங்காய் பறிப்பதற்கான கூலி மற்றும் போக்குவரத்துச் செலவு கூட கிடைக்காத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் விரக்தியடைந்த மா விவசாயிகள், தங்களது தோட்டத்தில் விளைந்த மாங்காய்களை விற்பனை
செய்ய முடியாமல் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பிரதான சாலை ஓரங்களில் டன் கணக்கில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். சாலைகளில் மாங்காய்கள் அழுகிய நிலையில் மலைபோல தேங்கி உள்ளது.
மா விவசாயிகள், ஆண்டு முழுவதும் கஷ்டப்பட்டுப் பயிர் செய்தும், அறுவடைக் காலத்தில் பறிப்புக் கூலி கூட கிடைக்காமல் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறோம்
ஒட்டு மொத்தத்தில் மாங்கூழ் தொழிற்சாலைகளால் மா விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர் இதே நிலை நீடித்தால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா விவசாயத்தை அழித்து விட்டு மாற்று பயிர் சாகுபடிக்கு செல்லும் நிலை ஏற்படும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
