நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அதில்,

கட்டணமில்லா தங்கும் விடுதிகள்

முதன்மை அரசு மருத்துவமனைப் பகுதிகளிலேயே, தங்கும் வசதிகளைக் கொண்ட புதிய தூய்மையான இலவசத் தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்படும். இதனால் உள் நோயாளிகளாகச் சேர்க்கப்பட்டவர்களை கவனித்துக் கொள்ளும் உறவினர்கள் போதிய தங்கும் வசதி இன்றி தவிப்பதும், தேவையற்ற செலவுகளும் குறைக்கப்படும். மருத்துவமனையிலும் நெரிசல் குறையும்.

மருத்துவச் சுற்றுலா

பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் தொடர்பாக 5 இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் வந்து குவிகின்றனர். இந்தியாவைத் தவிர்த்து ஏனைய பிற நாடுகளுக்கும் மேல்நாட்டவர் மருத்துவச் சுற்றுலாவுக்கென பயணிக்கின்றனர். அவர்களைக் கவரும் வண்ணம், தமிழகத்தின் மையப்பகுதியில் மருத்துவச் சுற்றுலா நகரம் உருவாக்கப்படும்.

இங்கு ஒரே இடத்தில் ஆதி முதல் அந்தம் வரை அனைத்து மருத்துவங்களும் உலகத் தரத்தில் அளிக்கும் தலைசிறந்த மருத்துவ வளாகங்கள் உருவாக்கப்படும். இதில் ஆங்கில மருத்துவம் மட்டுமல்லாது சித்த மருத்துவம், ஓகம், புள்ளியியல், ஆயுர்வேதம், யுனானி போன்ற மாற்று மருத்துவ வளாகங்களும் அமைக்கப்படும்.

இங்கு நோயாளிகள் உடன் வரும் உறவினர்களுக்கு 5 நட்சத்திர விடுதிக்கு இணையான தங்கும் விடுதிகள், கேளிக்கை பூங்காக்கள், வணிக வளாகங்கள் அமைக்கப்படும். மருத்துவத்துக்குப் பிறகு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களையும் சுற்றிப் பார்க்க மொழிபெயர்ப்பாளர்களோடு கூடிய சுற்றுலாவிற்கு அரசு ஏற்பாடு செய்து கொடுக்கும். இந்த மருத்துவச் சுற்றுலா நகரத்தின் மூலம் அரசுக்கு வருவாயும், நாட்டிற்கு சுற்றுலாத்துறையின் மூலம் அந்நியச் செலாவணியும் பெருகும்.

திருநங்கை, திருநம்பிகளுக்குத் தனி மருத்துவமனை

திருநங்கை, திருநம்பிகளின் மனம் மற்றும் உடலியல் சிக்கல்கள் மற்றும் தேவைகள் தனித்துவம் வாய்ந்தவை. இதை கருத்தில் கொண்டு, திருநங்கை. திருநம்பிகளுக்கென திருச்சியில் ஒரு தனி மருத்துவமனை உருவாக்கப்படும்.

மனவள மருத்துவமனைகள்

மனம் சார்ந்த சிக்கல்களுக்கான மருத்துவம் என்பது வெளிநாடுகளில் பரவலாக்கப்பட்ட ஒன்று. அதைப்போன்று தமிழகத்திலும் மனவள் மருத்துவமனைகள், நாடாளுமன்ற தொகுதிக்கு ஒன்று என 40 அமைக்கப்படும். மன அழுத்தம், மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்பு மருத்துவம், இயற்கை சார்ந்த சூழலில் அமைக்கப்படும்.

சி.பா.ஆதித்தனார் பெயரில் விளையாட்டுப் பல்கலைக்கழகம் தொடங்கப்படும். இங்குப் பன்னாட்டளவில் சிறந்த விளையாட்டுப் பயிற்சிகளும், உலகத் தரத்திலான பயிற்றுநர்களும் பணியமர்த்தப்படுவார்கள். விளையாட்டுத் துறையில் உயர் ஆராய்ச்சி படிப்புகளும் மேற்கொள்ளப்படும். இந்தப் பல்கலைக்கழகம் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள விளையாட்டுப் பல்கலைக்கழகத்தைவிட சிறப்பான கட்டமைப்பைக் கொண்டதாக அமைக்கப்படும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version