சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது மின்சாரத் தேவைகளுக்கு சூரிய ஆற்றலை பெருமளவில் பயன்படுத்தி வருவதன் மூலம், ஆண்டுதோறும் சுமார் 5.6 கோடி ரூபாய் வரை மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் தற்போது பயன்பாட்டில் உள்ள 54 கிலோமீட்டர் நீள முதல்கட்ட மெட்ரோ ரயில் பாதை மற்றும் அதன் நீட்டிப்புப் பகுதிகளில் இந்தச் சூரிய மின்சக்தித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரயில்கள் இயக்கம் தவிர்த்து, மெட்ரோ நிலையங்களின் இதர தேவைகளுக்கான மின்சாரத்தில் சுமார் 22 விழுக்காடு தற்போது இந்த மாற்று ஆற்றல் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.

இதற்காக சென்னை முழுவதும் மொத்தம் 36 முக்கிய இடங்களில், 10.77 மெகாவாட்  உச்ச திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, கோயம்பேடு உள்ளிட்ட மெட்ரோ ரயில் பராமரிப்பு நிலையங்கள், வாகன நிறுத்துமிடங்கள், அசோக் நகர், ஆலந்தூர், திருமங்கலம், அண்ணா நகர், ஷெனாய் நகர், நேரு பூங்கா, எழும்பூர், மீனம்பாக்கம், வடபழனி, அரும்பாக்கம், திருவொற்றியூர், விம்கோ நகர், ஈக்காட்டுத்தாங்கல், டோல்கேட், மண்ணடி மற்றும் காலடிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மெட்ரோ நிலையங்களின் கூரைப் பகுதிகளில் சூரிய மின்தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மெட்ரோவின் ஒட்டுமொத்த 54 கி.மீ வழித்தடத்திற்கும் ஒரு நாளைக்குத் தோராயமாக 4 லட்சம் யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது. இதில், கூரைகளில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்தகடுகள் மூலமாக மட்டுமே நாளொன்றுக்கு 51,000 யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

மெட்ரோவில் இரண்டு விதமாக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. ஒன்று ரயில்களை இயக்குவதற்கான ‘இழுவை மின்சாரம்’, மற்றொன்று ‘ரயில் அல்லாத மின்சாரம்’. ரயில்களை இயக்க அதீத மின்சக்தி தேவைப்படுவதால் அதற்குச் சூரிய மின்சாரத்தைப் பயன்படுத்த முடியாது. எனவே, இந்தச் சூரிய ஆற்றலானது மெட்ரோ நிலையங்களில் உள்ள ஏர் கண்டிஷனர்கள், எஸ்கலேட்டர்கள், மின்தூக்கிகள்  விளக்குகள் மற்றும் அலுவலகப் பயன்பாடுகளுக்கு மட்டுமே விநியோகிக்கப்படுகிறது.

இருப்பினும், ரயில்கள் இயங்கும் போது ஏற்படும் ‘மறுசுழற்சி பிரேக்கிங் தொழில்நுட்பம்’ மூலமாக ரயில்களை இயக்கத் தேவைப்படும் மின்சாரத்தில் 34 சதவீதம் வரை மீண்டும் மீட்டெடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில மின்வாரியக் கட்டணத்தோடு ஒப்பிடுகையில், சூரிய மின்சாரம் மூலம் ஒரு யூனிட்டிற்குச் சராசரியாக 3 ரூபாய் வரை மெட்ரோ நிறுவனத்திற்கு லாபம் கிடைக்கிறது. இதன் கணக்கீட்டின் படியே, வருடத்திற்கு ரூ.5.6 கோடி வரை செலவு மிச்சமாகிறது என அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, முதற்கட்ட மெட்ரோ பாதையில் கூடுதலாக 2 மெகாவாட் சூரிய மின் திட்டத்தை விரிவாக்கம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும், தற்போது கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோவின் ‘வழித்தடம்-4’ பகுதியில், கூடுதலாக 10 மெகாவாட் திறன் கொண்ட புதிய சூரிய மின்சக்தி திட்டத்தை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version