இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களை விடுவிப்பதற்கும், அவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்பதற்கும் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “09.11.2025 அன்று இரவு, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்களையும், அவர்களது இயந்திரப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளதை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இந்திய மீனவர்களும் அவர்களது மீன்பிடி படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது ஆழ்ந்த கவலை அளிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “2024-ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட பல மீனவர்கள் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 128 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர். மேலும் தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 248 மீன்பிடிப் படகுகளும் இலங்கை காவலில் உள்ளன.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் மீன்பிடித் தொழிலை முதன்மை வாழ்வாதாரமாக நம்பியுள்ள கடலோர சமூகங்களை கடுமையாக பாதித்துள்ளது. சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்குக் கடுமையான துன்பங்களை ஏற்படுத்தியுள்ளது” என்றும் கடிதத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அனுப்பிய கடிதத்தில், மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவது மற்றும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவது போன்ற நீண்டகாலப் பிரச்சனைக்குத் தீர்வு காண கூட்டுப் பணிக் குழுவை மீண்டும் உயிர்ப்பித்திடவும், இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நீடித்தத் தீர்வை அடைந்திட ஒருங்கிணைந்த முயற்சிகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்பதற்கும் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
